பக்கம்:அபிதா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



114 O லா. ச. ராமாமிருதம்


அபிதா முகத்தில் வெட்கம், பயம், கூடவே அவள் அடக்கப்பார்த்தும் மீறும் ஒரு மகிழ்ச்சி.

வெறுங்கையாலேயே இவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன? இந்தச் சமயத்தில் என் உடல் பலம், ஆத்திர பலம், அத்தனையும் என் இருகை விரல்களில் வந்து வடிந்திருப்பது எனக்கே தெரிகிறது.

பொறுமையிழந்து அவன் முகம் சுளித்தது. “உன் சித்தியேறிவிட்டால் வண்டியில் அப்புறம் இடம் ஏது? இவா வண்டியில் வரத்துக்குள்ளே நாம் எட்டு ஊரை எட்டு தரம் சுத்தி வந்து விடலாம். வா வா அபிதா, போகலாம் வாயேன்!”

அவன் குரல் கெஞ்சிற்று, கொஞ்சிற்று.

“சரி, சரி, சினிமாவும் டிராமாவும், உன் வெள்ளித்திரையில் பாக்கறது போறாதா. இங்கே வேறே நீ நடத்திக் காட்டணுமா?” சித்தி சீறி விழுந்தாள். அபிதாவிடம் திரும்பினாள். அவள் முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகத்தின் மறு சிலிர்த்தது.

“பொண்ணே உனக்கு சினிமா போய்த்தான் ஆகணும்னா, ஏறித் தொலை! மாட்டேன், வரல்லேன்னு பேரம் பேசி யாருக்கு இந்தப் பூச்சு வேண்டிக்கிடக்கு? 'மாட்டேன்னா, வல்லேன்னா, தாரும் தாரும் வாழைக்காய் தாளம் போல் கோபுரம், கில்லாப் பரண்டி கீப்பரண்டி கீச்சு மூச்சு மாப்பிரண்டி இன்னும் விளையாடிண்டிருக்கப் போறேளா? ஜானவாசத்துக்கு கார் வெக்கறோமோயில்லையோன்னு கவலைப்பட்டுண்டு மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான் தானே வாஹனம் இப்பவே வாங்கிண்டு வந்துட்டான். என் தீர்மானத்தில் என்ன இருக்கு? பின்னால்தான் கையைப் பிடிக்கறது இருக்கவேயிருக்கு. இப்பவே அவன் உன் கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/120&oldid=1128047" இலிருந்து மீள்விக்கப்பட்டது