பக்கம்:அபிதா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 115


பிடிச்சு இழுக்காமே நீயே போய் உக்காந்துடு, இல்லே ஆத்திலேயே தங்கீடு- எங்களுக்கு நேரமாறது!”

“அக்கா! நீ அபிதாவை எங்கே தங்க வெச்சுடுவியோன்னுதானே நானே வந்திருக்கேன்!”

சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பினோம். குருக்கள் திண்ணையில் உட்கார்ந்து பாக்கு வெட்டியால் கொட்டைப் பாக்கை நறுக்கிக் கொண்டிருந்தார். ஏன் இந்தச் சிரிப்பு: நடுவாய்க்காலில் இப்படி அழுக்குத் துணி அலசுவது கண்டா?

இல்லை. மரை 'லூஸா'?

அபிதா ஒன்றும் பேசவில்லை. பில்லியனில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். கன்னங்களில் மட்டும் இரண்டு சிவப்புத்திட்டு. மோட்டார் சைக்கிள், புறப்பாட்டு வெடி போட்டுக்கொண்டு கிளம்பிப் பறந்தது. பின்னால் ஒரு புழுதித்தோகை துரத்தி அதன் போக்கை மறைத்தது.

“தழையை அப்புறம் நாள் பூரா மெல்லலாம்; வண்டி பார்த்துண்டு வாங்கோ” என்று மாமி அதட்டிவிட்டு, திடீரென்று புருஷாளோடு பேசும் கூச்சத்தில் உடம்பையும் குரலையும் திடீரென்று குறுக்கிக்கொண்டு... (சகிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.)

“மாமா ரெடியாகல்லியா?”

“நான் வரவில்லை.” ஏன் இப்படிச் சொன்னேன்? எனக்கே தெரியவில்லை. சாவித்ரி என்னை நேர் முகமாகப் பார்த்தாள்.

“இல்லை எனக்கு அலுப்பாயிருக்கிறது. உங்களுடன் குருக்கள் போய் வரட்டும். நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/121&oldid=1130661" இலிருந்து மீள்விக்கப்பட்டது