பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxiii

வத்தை அங்கங்கே புலப்படுத்துகிறார். அம்பிகையின் தரிசனத்தால் விழியும் நெஞ்சும் களிநின்ற வெள்ளம் கரைகாணாமல் பெருகக் கருத்தினுள்ளே தெளிந்து நின்ற ஞானம் திகழ்கின்றதாம். "மனத்தில் இருள் சிறிதும் இன்றி ஒளி வெளியாகியிருக்கும் அருள் விலாசத்தைக் கண்டு, ஏதென்றறிகிலேன்!" என்று வேசாறிநிற்கிறார். அம்பிகையை உள்ளவண்ணம் கண்டு களித்ததை நினைந்து மகிழ்கிறார். "அகிலாண்டமும் நின், ஒளியாக நின்ற ஒளிர் திரு மேனியை உள்ளுதொறும், களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, வெளியாய் விடினெங்ங னேமறப்பேன் நின் விரகினையே” என்பதில் இவருடைய இன்பப் பெருக்கின் தலையளவு குறிப்பிக்கப்படுகிறது.

எல்லாம் கடந்து நின்ற அம்மை தமக்கு அருள் செய்து ஆனந்தாநுபவத்தைப் பெறச் செய்தது தம் பக்குவத்தையும் விஞ்சியதென்ற எண்ணம் இவருக்கு மீதூர்ந்து நிற்கின்றது. "பூதங்களாகி விரிந்த அம்மையே, நீ இரங்கத்தக்க எளியேன் அறிவெல்லைக்கு உட்பட்டது பெரிய அதிசயம்" என்று வியக்கின்றார். பக்குவம் இல்லாத காலத்தில் தம்மை ஆண்டு கொண்டதை நினைந்து, "எனக்கு வம்பே பழுத்த படியே" (21) என்று சொல்கிறார். "என் புன்மொழி நின் திருவடிக்கு உரியதானது நகைப்பதற்குரியது" (26) என்கிறார். தம் பக்குவத்தை அம்பிகை நினையாமலே ஆண்டு கொண்டாள் என்று தெரிவிப்பாராகி, "நாயேனையும்இங் கொரு பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்" (61) என்று பாடுகிறார்.

இப்படியெல்லாம் எளிதில் பெரிய இன்பங்களைக் கூட்டுவிக்கும் அபிராமியம்மையின் உபாசனை யாவற்றிலும் சிறந்ததென்பார். "அபிராமி சமயம் நன்றே" (94)