பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அபிராமி அந்தாதி



பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய
அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி
பாதம் என் சென்னியதே.

(உரை) அடியேங்களுக்குத் திருவருள் புரிவதற்கும் பொருந்திய திரிபுரையும், செப்பை உவமையாகச் சொல்லும் இணைந்த தனங்களின் பாரத்தினால் தளர்வுற்ற வஞ்சிக் கொடியைப் போன்ற திருவிடையையுடைய மனோன்மணியும், நீண்ட சடையையுடைய சிவபிரான் உண்ட விடத்தைத் தன் திருக்கரத்தால் கண்டமட்டுமாக்கி அமுதமாக்கிய அம்பிகையும், தாமரை மலரின் மேல் அழகு பெற வீற்றிருந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆகிய அபிராமியம்மையின் திருவடி என் தலைமேலுள்ளது. அதனை நான் வணங்குகின்றேன்.


முப்புரை - திரிபுரை (லலிதா, 626 ). திரிபுரை என்பதற்குப் பலவாறு பொருள் கொள்வர். புரை-மூத்தவள்: மும்மூர்த்திகளுக்கும் மூத்தவளென்பர் ஒரு சாரார். திரிபு: ரார்ணவம் என்னும் நூல், 'பிங்கலை, இடைகலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளிலும் இருப்பவளாதலினாலும், மனம் புத்தி சித்தம் என்னும் மூன்றிலும் உறைபவளாதலினாலும் திரிபுரையென்னும் திருநாமம் வந்தது' என்று. கூறும். முத்தேவர், மும்மறை, முத்தீ, முச்சக்தி, மூன்று ஸ்வரம் மூவுலகு. முந்நகரம் முதலிய மூவகைப் பிரிவுகளுக்கெல்லாம் உரியவளாதலின் இப்பெயர் வந்ததென்று கௌடபாத சூத்திர உரை கூறும். சந்திரகண்டம், அக்கினிகண்டம், சூரியகண்ட மென்னும் முப்பிரிவை