பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அபிராமி அந்தாதி

அன்னையைக் காட்டிலும் இரக்கம் உடையவர் யாரும் இல்லை, அவளைக் காட்டிலும் எளிய அன்பினரும் இல்லை. ஸ்ரீமாதாவாகிய அவளிடம் எந்த நிலையிலும் அன்பு செய்யலாம்.

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களாலும் இறைவியை வழிபடவேண்டும். இந்த மூன்றிலும் சிறப்பானது மனம். அம்மையை மனத்தால் நினைப்பதற்கு இன்னதுதான் நேரம். இன்னதுதான் நிலை என்ற வரையறை இல்லை. நாம் எப்போதுமே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் பேசாவிட்டாலும், தூங்கினாலும் விழித்திருந்தாலும் மூச்சு விடுவது நிற்பதே இல்லை. டாக்டர் மயக்க மருந்து கொடுக்க, உணர்வு இழந்து உடம்பு கட்டையாகிக் கிடக்கும் போதும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். உயிர் உடம்பில் இருப்பதற்கு அடையாளம் இது.

அன்னைபின் நினைப்பு மூச்சு விடுவதுபோல அமைய வேண்டும். நின்றாலும் உட்கார்ந்திருந்தாலும் படுத்திருந்தாலும் அவள் நினைவு நம் உள்ளத்தே இழையோட வேண்டும். நமக்கு விழிப்பு இருக்கும்போதெல்லாம் "நாம் இன்னார்' என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதனோடு, நாம் அன்னையின் குழந்தை என்பதும் இணைந்துவிட வேண்டும். அப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால் எல்லாக் காலத்தும் அம்மையை நினைத்துக் கொண்டே இருக்கலாம்.

இத்தகைய நிலையை அடைந்த அபிராமிபட்டர் அம்பிகையை நோக்கிப் பாடுகிறார்.