பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
95

முத்தியானந்தம்

"எம்பெருமாட்டியே, எளியேன் எக்காலத்திலும் உன்னை நினைத்து வாழ்கின்றேன். நின்றாலும் இருந்தாலும் படுத்தாலும் நடந்தாலும் உன்னை நினைத்தபடியே இருக்கின்றேன்" என்கிறார்.

நின்றும் இருந்தும் கிடந்தும்
     நடந்தும் நினைப்பது உன்னை.

பழைய சைவ நூல் ஒன்று, 'நின்றும் இருந்தும் கிடந்தும் நினைமின்கள். என்றும் சிவன்தாள் இணை' என்று கூறுகிறது. எந்தச் செயலைச் செய்தாலும் அம்மையை நினைந்தபடி இருக்கும் இயல்பு அடியார்களுக்கு வரும்.

முருகனுடைய அடியாராகிய அருணகிரியார் இந்த நிலையை வேறு ஒரு முறையில் சொல்லுகிறார், "நான் மகளிர் இன்பத்தை நுகரும்போதும் உன் வேலை மறவேன் என்கிறார்.

"கண்டுண்ட சொல்வியர் மெல்வியர்
     காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்மற
     வேன்மூது கூளித்திறள்
டுண்டுண் டுடுடுடு டுடு
     டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்
     சூர்க்கொன்ற ராவுத்தனே"

என்று பாடுகிறார், பக்தர்களின் நிலையை இது தெளிவாகப் புலப்படுத்துகிறது.

மனத்தால் எப்போதும் தியானம் செய்வதைச் சொன்னவர், அடுத்தபடி காயத்தால் செய்யும் வழி பாட்டைச் சொல்கிறார். இந்த உடம்பை அம்மையின் அடிமலரிற் கிடத்த வேண்டும். கையால் பூஜை செய்து