பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அபிராமி அந்தாதி

ஆ! என்ன அற்புதக் காட்சி! குஞ்சித சரணம் அம்பிகையுடையதாக அல்லவா இருக்கிறது? ஆம், அதுதானே யமனைக்கூட உதைத்தது? சிவபெருமான் கொன்றை மாலையை அணிபவன். அம்பிகைக்குச் சண்பகமாலை உகப்பானது. 'சாம்பேயகுஸுமப் பிரியை' அல்லவா? வலப் பக்கத்தில் கொன்றைத் தாரும் இடப்பக்கத்தில் சண்பகமாலையும் புரளத் தில்லை ஊரனும் அவன் பாகத்தில் உள்ள உமையும் ஒருவரில் இருவராகக் காட்சி அளிக்கிறார்கள். தில்லை ஊரனைப் பார்த்துப் பின் வாமபாகத்துப் பெருமாட்டியை உள்ளக் கண்ணில் தரிசிக்கிறார். அப்போதுதான் தாம் எடுத்துக்கொண்ட காரியம். நினைவுக்கு வருகிறது. "நாம் கணபதியை அல்லவா வணங்க ஆரம்பித்தோம்?" என்று எண்ணிப் பார்க்கிறார் அந்த ஆனந்த நடன சபையில் கணபதியும் நிற்கிறார்; கார் போன்ற கரிய மேனியோடு நிற்கிறார். மழை. பொழியும் மேகம் போல அருள் பொழியும் ஆனைமுகன் அம்மையப்பனது ஆட்டத்தைக் கண்டு தாமும் ஆடிக் கொண்டிருக்கிறார். "சுவாமி, கொன்றைத் தாரை அணியும் தில்லைப் பெருமானுக்கும், அவர் திருப்பாகத்தில் சண்பகமாலையை அணிந்து விளங்கும் உமாதேவிக்கும் பிரியமான மைந்தரே, கார்போன்ற திருமேனியை உடைய கணபதியே, தேவரீரிடத்தில் ஒரு விண்ணப்பம். செய்து கொள்கிறேன்" என்று தொடங்கி விட்டார்.

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும்
சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!...
கார் அமர் மேனிக் கணபதியே!

"என்ன விண்ணப்பம்?" என்று கணபதி தும்பிக்கையை அசைத்துக் கேட்கிறார்.

"உம்முடைய அன்னையைப் பாடவேண்டும்."