பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிராமி அந்தாதி

21

மென்மையான மணமுள்ள குங்குமப்பூக் கரைத்த குழம்பு நீரைச் சொல்லி நிறைவு பெறலாம் என்று,

மென்கடிக் குங்கும தோயம்

என்று பாடினார்.

* * *

அப்படியும் திருப்தி உண்டாகவில்லை. இவ்வளவும் தனித்தனியே ஒவ்வொரு சிறப்பினால் அம்பிகையின் வண்ண மேனிக்கு உவமையாகின்றன. எல்லாவற்றையுமே சொல்லி விடலாம் என்று தோன்றுகிறது. பெரியவர்கள் இந்தப் பொருள்களை உபமானமாகச் சொல்லி யிருக்கிறார்கள். ஆதலால் இத்தனையையும் சொல்லி ஒருவாறு அம்பிகையின் சமுதாய சோபையைத் தியானிக்க வழிகோலலாம் என்று எண்ணி, மேலே சொன்ன எல்லா உவமைகளையும் தொகுத்து வைத்தார்.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது
மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும
தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்
விழுத்துணையே,

ஒன்றை மூன்று முறை சொல்வதனால் உறுதி உண்டாகும். இங்கே ஒட்டிக்கு இரட்டியாக அம்பிகையின் திருமேனிக்குரிய உவமைகள் ஆறைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அம்பிகையைப் பூஜித்துத் தம் கையாலே அபிஷேகம் செய்கிறவர்களுக்குத்தான் கடைசி உவமையின் அருமை தெரியும். அந்த அருமையான பொருளை,