பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அபிராமி அந்தாதி

அம்பிகையை வேதமென்னும் மரத்தின் இடையிலே உள்ளனவாகிய கிளைகளாகவும் மேலே உள்ளதாகிய கொழுந்தாகவும் சொன்னார். ஒரு மரம் பல கிளைவிட்டு வளரவும், மலர் காய் கனிகளை உண்டாக்கவும் வல்லதாக இருப்பதற்குக் காரணம் அதன் வேர் உரத்துடன் நிலவுவதுதான். வேரில் பலம் இல்லையென்றால் மரம் நன்றாக, வளராது; பல நாள் உயிருடன் நில்லாது.

வேதமோ அநாதி காலமாக உள்ளது. அதன் வேர் மிக்க உரம் பெற்றதாக இருந்தால்தான் இப்படி இருக்க முடியும். அந்த வேர் எது? அம்பிகையே அதனை வேராக நின்று தாங்குகிறாளாம். வேர் புறத்தே புலப்படாமல் நிலத்திற்குள் மறைந்து பதிந்திருக்கும். வேதத்தின் சாகைகளில் அம்பிகையைப் பற்றிய செய்திகள் தெளிவாகக் காண முடியாமல் இருக்கலாம். ஆனாலும் வேதத்தின் தனி மூலமாக நின்று அதைத் தாங்குபவள் அம்பிகையே. வேதத்துக்கு மூலமாக இருப்பதனால் அவளை, "வேத ஜனனி’’ என்று சகசிரநாமம் துதிக்கிறது. ஆகவே இங்கே ஆசிரியர்,

சுருதிகளின் பதிகொண்ட வேரும்

என்று பாடினார்.

வேதத்துக்கு மூலமாக இருப்பது பிரணவம். அதி விருந்தே எல்லாம் தோன்றின. ஆதலின் வேத மூலமாகிய பிரணவமாக நிற்பவள் அபிராமி என்று கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.

குமரகுருபர சுவாமிகள் மீனாட்சியை,

"பழமறையின் குருந்தே வருக"

எனறு பாடுகிறார்:

"தொடுக்குங் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே" என்று பாராட்டுகிறார். -