பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளத்தில் வா

அம்பிகையின் திருவடியையே பற்றிக்கொண்டு. வாழும் வாழ்க்கையைப் பெற்ற அபிராமிபட்டருக்குத் தாம் பெற்ற பேற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. தம்முடைய உள்ளத்தில் ஒரு கால் சலனம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற ஐயமும் தோன்றியது. அரிய பொருள் ஒன்று கைவரப் பெற்றவர்களுக்கு, அதனைப் பல வகையினாலும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அடிக்கடி, அந்தப் பொருள் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் உண்டாகும். அந்த வகையில், அம்பிகையின் திருவடியைக் சிக்கெனப் பிடித்துக் கொண்ட இந்த அன்பருக்குத் தம்முடைய முயற்சியினால் மட்டும் தாம் பெற்ற நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற உண்மை புலனாயிற்று.

"நான் எவரும் அறியா மறையை அறிந்தேன் என்றும், நின் திருவடிக்கே செறிந்தேன் என்றும், சொன்னேனே! என் அளவில் எத்தனை முயற்சி இருந்தாலும் உன்னுடைய திருவருளும் அதற்குத் துணைசெய்யவேண்டும். நீ எப்போதும் என் உள்ளத்தே நின்று அருள் புரியவேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்ள வந்தார். "ஒரு கால் என் உள்ளம் உனக்கு ஏற்றதாகாதோ என்ற ஐயம். உண்டாகலாம்; இது காமக் குரோத லோப மோக மத மாச்சரியமாகிய விலங்குகள் திரியும் காடு என்று எண்ணி, இங்கே வர நீ அஞ்சலாம். அப்படியானால் ஒர் ஆண் துணையுடன் வந்து இங்கே குடிபுகுந்து இதைத் தூயதாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறார்,