பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளத்தில் வா

53

இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தொடங்கும் போது அம்பிகை மகா தபஸ்விகளுடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறவள் என்ற நினைவு வந்தது. திருக்கடவூரில் அம்மையையும் அப்பனையும் வழிபட்டு மாயாத வரத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். அந்த மாயா முனிவர் வந்து தம் சென்னியை வைத்து வணங்கும் திருவடியை உடையவள் அபிராமி. மச்சேந்திரர் முதலிய சித்தர்களும் அம்பிகையைத் தொழுபவர்கள். அவர்களை நினைத்தபோது, இருவினையும் அற்று ஜீவன் முக்தர்களாக விளங்கும் அந்த முனிவர்களும் அம்பிகையைப் பணி கிறார்கள். ஒன்றுக்கும் பற்றாத நாமும் பணிகிறோம். நம் உள்ளத்தில் வந்து அமரும்படி சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற எண்ணமும் உடன் வந்தது. பிறகு, 'புண்ணிய மிகுதியினால் சொர்க்கவாழ்வு பெற்ற தேவர்களும் அம்மையைப் பணிந்து நலம் பெறுவார்கள்’ என்ற கருத்து நினைவுக்கு வந்தது. "ஞானத்தால் கர்மங்களைப் பொசுக்கிய முனிவருக்கு மாத்திரம் அருள்பவள் அல்லவே! புண்ணியப் பயனைப் பெறும் தேவர்கள் முனிவர்களை விடத் தாழ்ந்தவர்கள். அவர்களும் அம்பிகையைப் பணிகிறார்கள். ஆதலால் மிக அரியள் எம்பெருமாட்டி என்று அஞ்ச வேண்டாம்" என்ற எண்ணம் தோன்றி அவருக்குச் சிறிதே தைரியம் ஊட்டியது. மறுபடியும் ஐயம் எழுந்தது, "தேவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள். அதன் பயனாகத் தேவலோகத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் முனிவர்களை விடத் தாழ்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம்மைவிட எத்தனையோ பங்கு உயர்ந்தவர்களாயிற்றே!" என்று கருதினார். உடனே அம்மையின் செளலப்பிய குணம் நன்றாக நினைவுக்கு வந்தது. திருக்கடவூரில் மனிதர்களும் வந்து பணிகிறார்களே என்ற நினைவு எழுந்தது, அதற்காகத்தானே அம்மை இத்தகைய தலங்களில் மூர்த்தீகரித்து