பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ᏮᏮ. அபிராமி அந்தாதி


நம்முடைய தலை சிக்குப் படிவது; தக்கபடி வைத்திராவிட்டால் நாற்றம் எடுப்பது. தலையில் மலர் சூடுவது கேசத்திலுள்ள நாற்றத்தைப் போக்கிக் குளிர்ச்சி தரும் பொருட்டு. ஆடவரும் மலர் அணிவது உண்டு, மலர் தலையில் கேசத்திற்கு அழகு தந்து மணமும் தண்மையும் தரும். ஆனால் தலையில் மற்றொன்று இருக்கிறது. அந்த வடுவை வெறும் மலரால் மாற்ற இயலாது. பிரமதேவன் எழுதிய எழுத்துத்தான் அது. அதைப் போக்கும் ஆற்றலுடைய தாமரை ஒன்று உண்டு. அதுதான் அம்பிகையின் திருவடித் தாமரை. தம் தலைக்குப் பூவாக அம்பிகையின் திருவடியைச் சூடுபவர் அபிராமி பட்டர். அப்பர் தம்தேவாரத்தில் இறைவனுடைய திருவடி அப்பூதியடிகளின் குஞ்சிப்பூவாக இருக்கிறதென்று பாடுகிறார்;


              "அழலோம்பும் அப்பூதி
               குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய்"


என்பது அது. அவ்வாறே இவ்வாசிரியரும் அம்பிகையின் பொலிவு பெற்ற திருவடித் தாமரையைத் தம் சென்னிப் பூவாகச் சூடியவர்.


           சென்னியது உன் பொன் திருவடித் தாமரை,


இறைவியின் திருவடிக்கும் நம் தலைக்கும் இணைப்பு உண்டாகாவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததனால் பயன் இல்லை.


       "கோளில் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான்
        தாளை வணங்காத் தலை"

என்பது குறள். நமக்கு உத்தமாங்கமாக இருப்பது தலை, அம்மைக்கு உத்தமாங்கமாக இருப்பது திருவடி. இந்த இரண்டும் ஒன்றுபட்டால், நாம் பிறப்பு இறப்புகளில் உழலும் மனிதராக இராமல் அம்பிகையின் அடியாராகி