பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தயிரும் மத்தும்

ஆத்மாக்கள் இறந்தும் பிறந்தும் உழன்று துன்புறுகின்றன. அந்த இருவகைப் பிணிகளாளும் தளர்ச்சி அடைகின்றன. பரப்பிரம்மத்தோடு ஒன்றினால் அந்தத் தளர்ச்சி நீங்கி இன்பத்தை அடையலாம், புண்ணியம் பாவம் என்ற இரண்டு வினைகளாலும் உயிருக்கு எப்போதும் பயணம் இருந்துக்கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் மேலான பிறப்பைப் பெற்று மறுபடியும் கீழான பிறப்பை அடைவது உண்டு. வேறு சமயங்களில் கீழான பிறப்பைப் பெற்ற உயிர் மேற்பிறப்பை அடைவதும் உண்டு. புழுவாய்ப் பிறந்த உயிர் மனிதனாகப் பிறக்கலாம். மனிதனாகப் பிறந்தவன் மாடாகப் பிறக்கலாம். உயர்ந்த கதி, தாழ்ந்த கதி ஆகிய இரு நெறிகளிலும் சென்று இறந்து பிறந்து வாழ்வதையே தன் கதையாகக் கொண்டிருக்கும் உயிருக்கு இந்தப் பயணத்தால் தளர்ச்சியே உண்டாகிறது.

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
சொல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"

என்று மணிவாசகர் முறையிடுகிறார். இத்தனை பிறப்புகள் எடுத்ததன் பயன் இளைப்புத்தான்.

"மாதா உடல்சலித்தாள், வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும்,கைசலித்து விட்டானே"