பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75.

தயிரும் மத்தும்


வினைப்பயனை அநுபவிப்பதற்காக அவள் சிருஷ்டியாதி தொழில்களைச் செய்கிறாள். வெண்ணெயை உருட்டித் திரட்டி மத்தை மூலையிலே சார்த்தும் வரையில் அவளுக்கு வேலை இருக்கிறது. தயிர் கடையும் வேலையை அவள் விடியற் காலையிற் ஆரம்பித்து விடுகிறாள். தத்துவங்களைத் தோற்றுவிக்கும் விடியற்காலையில் அவள் எழுந்து வேலை செய்யத் தொடங்குகிறாள். தத்துவங்கள் அடங்கிய மகாப் பிரளயத்தில் அவள் சற்றே ஒய்வெடுத்துக் கொள்கிறாள்; இயங்காமல் தன் தொழில்களை ஒடுக்கிக் கொண்டு நிற்கிறாள். அவள் கடையாவிட்டால் மத்துக்கு ஆட்டம் இல்லை, தயிரில் வெண்ணெய் எடுக்க முடியாது.

இந்த ஆய்ச்சியைப் பார்த்துப் பேசுகிறார் அபிராமி பட்டர், 'தாயே, இந்தத் தளர்ச்சியைப் போக்கித் தளர் வில்லாத ஒரு கதியை என் ஆவி அடையும் படியாகத் திருவுள்ளம் கொள்ள மாட்டாயா?" என்று வேண்டு கிறார். -

ஆவியே தாமாக நின்றாலும் வேற்றுமை நயம் கருதி, "என் ஆவி' என்றார்.

அம்பிகை வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கும் பெரிய பண்ணைக்காரி. தான் உட்கார்ந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்க முடியுமா? உலகில் சிறிதளவு செல்வம் படைத்தவர்களும் வேலை செய்ய ஆள், சமையல் செய்ய ஆள் என்று ஆட்களை நியமித்து வேலை வாங்கும்போது எல்லாச் செல்வத்துக்கும் தலைவியான பராசக்தி பலரை ஏவலராகக் கொண்டு தன் அரசை நடத்துவது வியப்பு அன்றே?

அவள் செய்கிற தொழில்களுக்குப் பல அதிகாரிகளை நியமித்திருக்கிறாள். அவர்களுள் யாவரினும் சிறந்த தலைவர்களாக விளங்குபவர்கள் மூன்று பேர். படைப்புத்.