பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79

தயிரும் மத்தும்

சொல்லுகிறார். அந்தச் செளந்தரிய லஹரியிலே தம்மை மறக்கும் சங்கரர் பெருமை நாம் அறிந்தது தானே?

ததியுறும் மத்திற் சுழலும்என்
     ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்
     டாய்;கம லாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும்
     மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடி யாய்,சிந்து
     ரானன சுந்தரியே!

(தயிரில் நின்று சுழலும் மத்தைப்போலப் பிறப்பு இறப்புக்களினிடையே சுழலும் என் உயிர், தளர்ச்சி யில்லாததாகிய ஒருநல்ல நிலையை அடையும் வண்ணம் திருவுள்ளத்தில் கொண்டருள வேண்டும்; தாமரையை இருக்கையாகக் கொண்ட பிரமனும், சந்திரனை வைத்த சடாபாரத்தையுடைய நின் கணவனாகிய சிவனும், திருமாலும் வணங்கி எப்போதும் துதிசெய்கிற செம்மை யான திருவடிகளை உடையவளே, செவ்வண்ணத் திலகம் அணிந்த நெற்றியுள்ள பேரழகியே!

ததி-தயிர். ஆவி-உயிர் கதி-வழி; இங்கே நிலை. கருது கண்டாய்; கண்டாய்,அசைநிலை. கமல ஆலயன்; ஆலயம்-இருப்பிடம். மதி-பிறை. வேணி-சடை. மகிழ்நன்-கணவன். சிந்துரஆனனம்; சிந்துரம்-குங்குமத் திலகம்; ஆனனம்-முகம்; இங்கே நெற்றி.)

பிறப்பு இறப்பாகிய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்பது கருத்து.

மாணிக்கவாசகர் ஒரு வகையில் மத்தையும் தயிரையும் உவமையாக ஆண்டிருக்கிறார்: "மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கது வக்கலங்கி, வித்துறு வேனை விடுதி கண்டாய் என்பது அவர் திருவாக்கு.

இது ஏழாம் பாடல்: