பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழியாத கன்னிகை

அடியையும் ஆனனத்தையும் தியானித்து அபிராம வல்லியின் பேரழகிலே உள்ளத்தைப் பறிகொடுத்த ஆசிரியருக்கு, அப்பெருமாட்டியின் திருவருள் வல்லபத்தால் தம்முடைய அறியாமை நீங்கியது நினைவுக்கு வருகிறது. தன்னை நம்புகிறவர்களுக்கு அருள் செய்ய முன்வரும் அன்னையின் பரங்கருணையை எண்ணி இன்புறுகிறார்.

அவள் கண்ணையும் கருத்தையும் கவரும் பேரழகி. அந்த அழகை நுகரும் ஒருவன் இருக்கிறான். அவன் தான் நம்முடைய தந்தையாகிய பரமசிவன். அவனுக்குத் துணைவியாக நின்று அவனுக்கே புகழை உண்டாக்குகிற பெருமாட்டி அவள்; ஆண் எப்படியிருந்தாலும் அழகியாக ஒரு மனைவி அருகில் உடன் வந்தால் அவளால் அவனுக்குப் பெருமை உண்டாகிறது. அப்படி இந்தச் சுந்தரியைச் சிவபெருமான் தன்துணைவியாகக் கொண்டு. பெருமையை அடைகிறார்.

   சுந்தரி, எந்தை துணைவி.

மனையாட்டி என்று சொல்லாமல் துணைவி என்றார் இறைவன் அவளுடைய துணையினால் தருக்கோடு விளங்குகின்றான். ஆதலின் அவ்வாறு சொன்னார். பானை பிடித்தவள் பாக்கியம்' என்று பாராட்டுவது உலக இயல்பல்லவா? -

எந்தைக்கே துணையாக இருந்து நலம் செய்யும். பெருமாட்டி, தன்னை நம்பிய குழந்தைகளின் துன்பத்தைப் போக்குகிறாள். அவளுடன் ஒன்றி அருளின்பம். பெறாமல்,பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள் ஜீவர்கள்.