பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15


பாலர் பள்ளியில் மென்மையான இயல்புள்ள விலங்குகளின் குட்டிகளுக்கு மட்டும்தான் இடம் உண்டு என்று அல்சேசன் அண்ணாவி அறிவித்து விட்டார். இதில் வன்மையான இயல்புள்ள விலங்குகளுக்கு முதலில் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அண்ணாவி விளக்கஞ் சொன்ன பிறகு அவை எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு விட்டன. பெரியவர்கள் எடுத்துச் சொன்னதின் பேரில் கடைசியாக கழுதைக் குட்டிகளையும் பாலர் பள்ளியில் அண்ணாவி சேர்த்துக் கொண்டு விட்டார்.

பள்ளிக்கூடம் தொடங்கி பத்து நாள் கழித்துத்தான் முயலம்மாவுக்குச் செய்தி தெரியும். முயலம்மா செய்தி தெரிந்த மறுநாளே தன் நான்கு குட்டிகளை யும் அழைத்துக் கொண்டு காட்டுப்பள்ளி கூடத்துக்குச் சென்றது. பட்டணத்து அல்சேசன் அண்ணாவி இந்த நான்கு முயல் குட்டிகளையும் உற்றுப்பார்த்தார். அவை பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தவுடன் பள்ளிக்கூடமே களை கட்டி விட்டது. அங்கு இருந்த எல்லா மாணவ, மாணவிகளைக் காட்டிலும் இந்த முயல் குட்டிகளே அழகாய் இருந்தன. நான்கும் வெள்ளை, வெளேரென்று பனிக்கட்டியின் நிறத்தில் பளிச்பளிச்சென்று அழகாய் இருந்தன. அவற்றின் அழகுக்காகவே அண்ணாவி பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

அழகாக மட்டும் அல்ல அறிவுள்ள குழந்தைகளாகவும் அந்த முயல் குட்டிகள் இருந்தன.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கடகடவென்று பதில் கூறின. விளையாட்டிலும், அவை நல்ல மதிப்பெண்கள் வாங்கின.