பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
மரக் கிளையில்
ஒரு முயல் குட்டி

பொழுது விடியும் நேரம். வானத்தில் இருந்த விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. ஆயிற்று இன்னும் ஒன்றுதான். அதுவும் மறைந்துவிட்டது. கிழக்கில் செங்கதிர் வண்ணப்பந்து போல் தலை நீட்டிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் முன் திட்டமிட்டபடியே முருகனும் மாதவனும் முயல் வேட்டைக்குப் புறப்பட்டார்கள். இருவர் கையிலும் வேட்டைத் துப்பாக்கிகள் இருந்தன.

மாதவன் வனத்துறையில் ஒரு பெரிய அதிகாரி. அவரிடம் கண்ணன் என்ற வேட்டை நாய் ஒன்று இருந்தது. “கண்ணா!” என்று அழைத்தால் பாய்ந்தோடி வரும். சொன்ன வேலையைச் சொன்னபடி செய்யும். முயல்களை விரட்டிப் பிடிப்பதில் மிகத் திறமையுடையது கண்ணன். அப்படிப்பட்ட நாயை அன்று அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. அது ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்ததால், காலில் சுளுக்கு ஏற்பட்டு வீட்டிலேயே தங்கி மருந்து போட்டுக் கொண்டிருந்தது.