பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


“நகரத்தில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டது குட்டி முயல்.

“வேலையில்லாமலா நகரத்துக்குப் போகிறேன். எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ வருகிறாயா என்ன? வருவதாய் இருந்தால் தொண தொண வென்று பேசக்கூடாது?” என்று கட்டளையிட்டது ஆண் முயல்.

குட்டி முயல் தொந்தாவு செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுத்தது.

உடனே இரண்டு முயல்களும் சோடியாகப் புறப்பட்டன. மின்னல் வெட்டியது போல் அவை துள்ளித் துள்ளி ஓடிப் பட்டணத்து எல்லையை அடைந்தவரை யாரும் அவைகளைத் தடைப்படுத்தவில்லை.

நகர எல்லையில் ஒரு விளையாட்டு வெளி.அங்கு சின்னஞ் சிறு பிள்ளைகள் இரண்டு பேர் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். முயல்கள் அந்த இடத்தையடைந்தன.

அந்தப் பிள்ளைகள் பந்து விளையாடுவதை இரண்டு முயல்களும் கவனித்துக் கொண்டிருந்தன. பந்து இரண்டு புறமும் போய்ப் போய் மாறிவருவது அழகாகத்தான் இருந்தது. ஆனால் முயல் பாய்வதைப் போல் அப்படிச் சுழித்துத் திரும்பித் தாவினால் எவ்வளவு அழகாய் இருக்கும். அந்தப் பிள்ளைகளுக்கு தங்கள் விளையாட்டைக் காட்ட வேண்டும் என்று இரண்டு முயல்களும் நினைத்தன.