பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மாட்டேன், உம்முடைய பிள்ளைகுட்டிகளையும் கடிக்க மாட்டேன். நீர் தாராளமாக இந்தக் காட்டில் எப்பொழுது வேண்டுமானாலும் பயம் இல்லாமல் போய் வரலாம்.”

இதைக் கேட்ட பார்ப்பனனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒப்புக்கொண்டால் வாக்குக் கொடுத்தபடி தொடர்ந்து பால் கொடுத்து வர வேண்டும். ஏழைப் பார்ப்பனனாகிய தன்னால் அவ்வாறு செய்யமுடியுமா என்று மலைத்தான். ஒப்புக் கொள்ளா விட்டால் அந்தப் பொல்லாத நாகப்பாம்பு அப்பொழுதே அவனைக் கடித்துக் கொன்று விடும். உடனே சாவது நல்லதா, தொடர்ந்து தொல்லைப் படுவது நல்லதா என்று அவன் மயங்கினான்.

இந்த நெருக்கடியான நிலையில் யாரும் ஒரே முடிவுக்குத்தான் வர முடியும். எப்படியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் யாருக்கும் தோன்றும். பார்ப்பனனும் பாம்புக்கு வாரந்தோறும் பால் கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான். ஐந்தாறு வாரங்கள் எப்படியோ சமாளித்து பாம்புக்குப் பால்கொண்டு போய்க்கொடுப்பான். தானம் வாங்கும் பணத்தில் ஒருபகுதி பாலுக்குச் செலவாவது அவனால் தாங்க முடியாததாய் இருந்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எண்ணி எண்ணிப் பார்த்தான்.

தொடர்ந்து சிந்தித்தால் ஒரு வழி தோன்றாமலா போய் விடும். பார்ப்பனன் ஒரு வழியைக் கண்டு பிடித்தான்.