தென்னாடு 49
நாணயங்களில் பெரும்பகுதி தமிழகத்திலேயே வந்து நிலையாகத் தங்கிற்று என்பதை இது காட்டுகிறது.
கீழ்திசைத் தொடர்பு
கி.மு.6ஆம் நூற்றாண்டில் இலங்கையின் முதல் அரசனான விசயன், பாண்டியன் மகளை மணம்புரிந்து கொண்டான். பாண்டிய இளவரசி சென்ற கப்பலில் யானைகள், தேர்கள், அரசியற் பணியாளர்கள், பதினெண் தொழிற் குழுக்களுக்குரிய ஆயிரம் குடிகள், 75 பணிப்பெண்கள். 700 பணியாட்கள் ஆகியோர் சென்றதாக அறிகிறோம். மன்னரைப் போலவே மக்களும் இரு நாடுகளிலும் மணத்தொடர்பு கொண்டிருந்தனர்.
‘எலாரா’ என்ற சோழநாட்டுத் தமிழ்வீரன் இலங்கையை வென்று கி.மு.205 முதல் 161 வரை யாவரும் புகழ ஆண்டதாக அறிகிறோம். தமிழ் மரபில் இவன் ஏலேலசிங்கன் என்று குறிக்கப்படுகிறான். ஏழுகடல் கடந்தாலும் ஏலேலசிங்கன் கப்பல் திரும்பி வரும், என்ற பழமொழியும், 'ஏலேலோ' என்ற கப்பற் பண்ணும் தமிழரிடையே அவன் மரபை நினைவூட்டுகின்றன. அவன் திருவள்ளுவரின் மாணவனும் வள்ளலும் ஆவான் என்று தமிழ் மரபுரை ஒன்று கூறுகிறது.
ஏலேலசிங்கனைப் பின்பற்றித் தமிழர் பலகால் இலங்கைக் கரையில் மாந்தோட்டத்தில் இறங்கித் தம் வாள் வலியால் செல்வமும் குடியிருப்புகளும் அமைத்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் குளங்களும், அவர்கள் வெற்றிகட்கும் கலைப் பண்புக்கும் சான்றுகளாயுள்ளன.
கி.மு.44 முதல் 25 வரையில் சில தமிழ் மன்னர் இலங்கையில் ஆண்டனர். ஐந்து - ஏழாம் நூற்றாண்டுகளில் இருபுறமும் படையெடுப்புகளும் எதிர்ப்படையெடுப்புக்களும் நிகழ்ந்தன.
தமிழர் படையெடுப்புக்களும் குடியேற்றங்களும் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தே அந்தமான், பர்மா, மலாயா, சுமாத்ரா, சாவா, இந்து-சீனா ஆகிய கடல் கடந்த நாடுகளில் பரவின. இவ்வெல்லா நாடுகளிலும் உள்ள பெரிய கோயில்களும், கல்வெட்டுக்களும் அவற்றின் இலக்கியங்களும், மொழியும், ஊர்ப்பெயர் குடிப்பெயர்களும், பழக்க வழக்கங்களும், கலைகளும் இத்தெடர்புக்கு இன்றளவும் சான்று பகர்கின்றன.