உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 51

விழாவின் நெடியோன் என்றும், நன்னீர்ப்பஃறுளி ஆற்றுக்கு உரியவன் என்றும் குறிக்கப்படுகிறான். முச்சங்க மரபின்படி இவன் தலைச்சங்க காலப்பாண்டியன் ஆவன். தொல்காப்பியம் அரங்கேற்றுவித்த நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லது சயமாகீர்த்தி இவனே. சய அல்லது யவநாடாகிய சாவகத்தை வென்று, கடல்நீர் வந்து அலம்புமிடத்தில் பாறையில் தன் அடி பொறித்து, இவன் முந்நீர் விழா ஆற்றினான். இக்காரணத்தால் இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று புகழப்பட்டான். மதுரை அல்லது சுமாத்ராவிலும், சாவாவிலும் இவ்விழா பின்னாட்களிலும் அரசரால் கொண்டாடப்பட்டதாக அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இவன் எவ்வளவு காலத்துக்கு முந்தியவன் என்று கூற முடியாவிட்டாலும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கு மிகவும் முற்பட்டவன் என்று துணிந்து கூறலாம். பஃறுளி ஆறு பாசனத்துக்காக வெட்டப்பட்ட ஆறே என்று அறிகிறோம். இவ்வளவு பழங் காலத்திலேயே பாண்டியர் நீர்ப் பாசனத்திலும் வேளாண்மையிலும் கருத்தைச் செலுத்தியிருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி ஆகும்!

கால அறுதி ஏற்பட்டால், உலக வரலாற்றிலேயே இவன் முதற் கடற் பேரரசன் என்ற செய்தி தெளிவாக விளக்கமுறுதல் கூடும். சுமாத்ராவில் பாலம்பாங்கில் ஆண்ட பேரரசர் பிற்காலத்தில் சீர்மாறன் என்ற குடிப் பெயரும் பிற தமிழகத் தொடர்புங் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசரைப் போலவே பண்டைக்கால முதற்பாண்டியப் பேரரசர் மலாய், கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய கடல் கடந்த பகுதிகளில் பரந்திருந்தனர் என்று கருத இடமுண்டு.

கடைச் சங்ககால பாண்டியர்களுள் முற்பட்டவனாகக் கூறத் தக்கவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி, வேள்விக்குடிப் பட்டயத்தின்படி அதற்குரிய நன்கொடையை முதன் முதல் அருளிய அரசன் இவனே. 'விழாக்காலங்களில் நகர்வலம் வரும் முக்கட் செல்வர் குடைக்கன்றி உன் குடை எக்குடைக்கும் சாயவேண்டாம்!' என்று காரிகிழார் என்ற புலவர் இவனைப் பாடியுள்ளார். இவன் வேளிரை அடக்கியாண்ட வீர அரசன் என்று நெட்டிமையார், பெரும்பல்லியத்தனார் ஆகிய