உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. இறுமாப்பும் ஏமாற்றமும்

மீகாமன் முகத்தில் வீரமும் தியாகமும் நிழற்படும் என்றுதான் கப்பலோட்டிகள் எண்ணியிருப்பர். ஆனால், அதில் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று. அமைதி நிலவிற்று. வெற்றி எக்களிப்பு நடனமிட்டது!

ஒரு முதல்தர நடிப்பில் அவன் வெற்றி பெற்றிருந்தான். வாழ்க்கை முழுதும் அவன் நடித்த ஆஷாடபூதி நாடகத்தின் முத்தாய்ப்பு அந்நாள். அவன் தியாகி என்று பெயரெடுத்தான்; வீரன் என்று பெயரெடுத்தான். மக்கள் உள்ளத்தில், டியூராண்டின் முதலாளி உள்ளத்தில், அழியா இடம் பெற்றான். நடிப்பு அவ்வளவு முதல்தரம். கப்பலின் பத்திரங்கள் முதற்கொண்டு அனுப்பிவிட்டான். ஆனால், அவன் சட்டைப் பையில், புகையிலைப் பெட்டியில் எழுபத்தையாயிரம் வெள்ளி இருந்தது. இதை எண்ணி அவன் சிரித்தான். அது ஒரு பேய்ச் சிரிப்பு!

பிளீன்மாண்டில் அவன் பயணப்பை இருந்தது. அது ஹான்வேயிலிருந்து ஒரு கல் தொலைதான். முன்பே அவன் அத்தொலையை நீந்திக் கடந்திருக்கிறான். உலகில் அவன் இறந்ததாகக் கருதுவார்கள். பிளீன்மாண்டில் அவன் எத்தனை நாள் இருந்தாலும் உணவுண்டு. பேயாட்டத்துக்கு அஞ்சி யாரும் வரமாட்டார்கள். கள்ள வாணிகக்காரர் வந்து அவனை இட்டுச் செல்வர். பல தலைமுறைக்குப் போதிய பணம் பையிலிருக்கிறது. அவன் தன் வருங்கால வாழ்வின் வெற்றிக் கோட்டைகளை அச்செல்வத்தின் அடிப்படையில் கட்டினான். அதன் மீது அவன் மாய நடிப்புத் திறத்தின் வீரப் புகழ்க்கொடி பறந்தது! அவன் எக்களித்தான்.

ஆனால், இத்தனை எக்களிப்பிடையேயும் சடுதியில் ஓர் ஏமாற்றம் அவனை நோக்கிச் சிரித்தது. மூடுபனி அகன்றது.