இருதுளிக் கண்ணீர்
111
டியூராண்டின் புகைபோக்கி தெரிந்தது. அவன் ஓடிச்சென்று பார்த்தான். இயந்திரமும் கப்பற் சட்டமும் அப்படியே இருந்தன. இதனை, இங்கே கொண்டுவந்தது அராபிக்கதைப் பூதம் எதுவோ என்று திகைத்தான்.
அது பூதமாயிராமல் மனிதனாயிருந்தால், கில்லியட்டே யாக வேண்டும் என்று கருதி, அவனை அழைக்கத் துறை முகத்தின் மணியை அவசர அவசரமாக அடித்தான்.
கில்லியட் இதேசமயம் உள்ளத்தை முழுதும் டெரூசெட்டின்பால் ஓடவிட்டுக்கொண்டு தோட்டத்தில் இருந்தான். வேலியின் மறுபுறம் எதிர்பாராவகையில் காட்ரேயும் அங்கே வந்தான். அவன் உறவினர் ஒருவர் இறந்து அவனுக்குத் திடுமெனப் பெருஞ்செல்வம் உரியதாயிற்று. மறுநாளே அவன் காஷ்மீரில் பயணமாகச் செல்ல வேண்டும். இதைக்கூறி டெரூசெட்டிடம் விடை பெறவே அவன் எண்ணினான்.
ஆனால், இறுதி விடைபெறும் சமயமாதலால் தன் உள்ளக் காதலை அவன் அவளிடம் கொட்டினான். அவளும் தன் உள்ளம் அவனிடமே ஈடுபட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். காதலரிருவரும் ஒருவருடன் ஒருவர் மாறா உறுதி கூறிக் காதலில் இணைந்தனர். லெத்தியரி மணியடித்ததைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை.
கில்லியட்டின் உள்ளம் உடைவுற்றது. அவன் காதல் தெய்வம் அவனை அசட்டைசெய்து வேறிடத்தில் உள்ளம் பறிகொடுத்தது. அவன் அவள்மீது சினம் கொள்ளவில்லை. அவன் வாழ்வின் ஆர்வம் முழுவதும், அவன் தியாகம் முழுவதும் கசப்பாக மாறிற்று. ஆயினும், கசப்பிலும் காதல் அவன் உள்ளப் பண்பை உயர்த்திற்று.அவன் காதலர் நலனில் அக்கரை கொண்டு வெளியேறினான்.
லெத்தியரி, கில்லியட்டை ஆரத் தழுவிக்கொண்டான். செய்தி யாவும் கேட்டான். குளூபினின் மாயமுடிவுபற்றிய கதை கேட்டபின் அவன் மகிழ்ச்சி கரைகடந்தது. அந்நிலையில் அவன் "ஆகா, நான் விரும்பிக் காத்துக்கிடந்த என் மருமகன் நீயே; டரூசெட் இனி உன் மனைவி; புதிய டியூராண்டுக்கும் நீயே மீகாமன்” என்றான்.
66