1. கடல் மறவர் பனிமீது படிந்த பாவையின் பரிசு
பால் குழம்பில் குளித்ததுபோல, நிலவுலகெங்கும் வெண்பனியாடை போர்த்திருந்தது. பழய ஆண்டு துயின்றது. புதிய ஆண்டு இன்னும் பிறக்கவில்லை. அன்று கிறிஸ்துமஸ் விழா நாள்!
கடிகாரத்தின்படி காலை ஏறிவிட்டது. ஆனால், குளிர் காலமாதலால் கதிரவனொளி இன்னும் பரவவில்லை. வெண்கரடி போலவும் வெள்ளானை போலவும் வெள்ளையான பிறவிலங்கு வடிவங்கள் போலவும் காட்சியளித்த கட்டடங்க ளிடையே தெருக்கள் ஆளற்ற பனிக்காட்டுப் பாதை போல வெறிச்சென்றிருந்தன. யாரும் நடமாடவில்லை.
முன் ஒன்றும் பின் ஒன்றுமாக இரண்டு உருவங்கள் மட்டும் நகர்ந்து சென்று கொண்டிருந்தன. ஒன்றன் நடை பனியிடையே பனியாக மிதந்து சென்றது. அது ஒரு பெண். பின்னால் எட்டி நடந்தது ஒரு ஆண் உருவம். இருவரும் தொடர்பற்ற யாரோ இருவர் போலத்தான் சென்றனர். ஆனால், பெண் அடிக்கடி குனிந்து நிலத்தில் ஏதோ கையால் கீறிக்கொண்டே சென்றாள். ஆடவன் அதில் கருத்துச் செலுத்தவில்லை. அவள் யார் என்றும்
கவனிக்கவில்லை.
தற்செயலாக அவன் பார்வை நிலத்தில் ஒருதடவை படிந்தது. அவன் முகம் வியப்புக் குறி காட்டிற்று. கில்லியட்! ஆம். ‘கி-ல்-லி-ய-ட்!” அது தன் பெயர்தான். அப்பெண் யார்? அவள் ஏன் தன் பெயரை எழுதவேண்டும்? அதுவும் பனியில்!
அவன் விரைந்து முன் சென்றான், அவள் யாரென்று
பார்க்க!