9. பேயடைந்த மாடம் பிளீன்மாண்ட்
கெர்ஸ்னி ஒரு முக்கோண வடிவுள்ள தீவு. மூன்று மூலைகளிலும் நிலமுனை ஒவ்வொரு நில மூக்காக நீண்டிருந்தது. டார்டிவல் இம்மூலைகளில் ஒன்று. குளூபின் பிறந்து வாழ்ந்த இடம் இதுவே. இந்த இடம் கள்ளவாணிகக்காரருக்கு ஒரு சந்திப்பாகவும் அமைந்தது. அதற்கு வேண்டிய பல வசதிகளும் அங்கே இருந்தன.
நிலமூக்கின் கோடியில் ஒரு அழகிய மாடம் இருந்தது. அது ஒரு சிறுகுடும்பம் வாழத்தக்கதாய் அந்தசந்தமாயிருந்தது. அதன் மூன்றுபுறம் கடல் மறுபுறம் ஒரு தோட்டப்பகுதி. தோட்டப்பகுதி பாழாய் கிடந்தது. மாடமும் பாழாகவே கிடந்தது. கடற்புறத்தி லுள்ள மூன்று மதில்களில் ஒரு மதிலில் கதவோ சாளரமோ எதுவும் இல்லை. முன்னாலுள்ள கதவும் சாளரங்களும் செங்கலால் அடைபட்டிருந்தன. மற்ற ஒரு பக்கத்தில் இரண்டு சாளரங்கள் இதுபோலவே செங்கலால் அடைபட்டிருந்தன. ஒரே ஒரு பக்கம், தென்புறம் மட்டும் பலகணிகளில் கதவுகள் அகற்றப்பட்டுத் திறந்த மேனியாய் இருந்தன.
கிட்டத்தட்ட மாடத்தின் நாற்புறமும் கடல் இருந்தது. வேலி இறக்கத்தின்போது மட்டுந்தான் ஒரு சிறு இடைவழி இடுக்கு அதை நிலத்துடன் இணைத்தது.
ம்மாடத்தின் பெயர் பிளீன்மாண்ட்யாரும் அதன் பக்கம் நாடுவதில்லை - அதன் பெயர்கூடக் கூறுவதில்லை. ஏனென்றால் அதில் பட்டப் பகலில் கூடப் பேய்கள் நடமாடியதென்று மக்கள் நம்பினர்.
இடமும் சூழலும் இந்நம்பிக்கையும் சேர்ந்து கள்ள வாணிகக்காரருக்கு அதை ஒரு முதல்தர மூலதளமாக்கிற்று.