8. டெனிஸன் கவிதையுலகின் முடிசூடா மன்னன்
1. பிறப்பும் இளமையும்
மூன்று தலைமுறைகளாக இங்கிலாந்து நாட்டை ஆண்ட விக்டோரியாப் பேரரசியின் ஆட்சியின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் வாழ்ந்த பெருங்கவிஞர்கள் டெனிஸனும் பிரௌனிங்கும் ஆவர். அவர்களுள் பிரெளனிங் கவிதை, கடுநடையும் ஆழ்ந்த கருத்தும் உடையது. எனவே, அவர் கவிதையின் முழுப்பயன் புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் மட்டுமே எட்டுவதாயிருந்தது. ஆனால் டெனிஸனோ அரசவை முதல் அங்காடிவரை அனைவரும் புகழ்ந்து பாராட்டும் முறையில் அந்நாளைய கவிதை உலகில் முடிசூடா மன்னராய் விளங்கியவர்.
பொதுவில் அரசவைக் கவிஞராகும் பேறு பெற்றவர் சமயத்துக் கேற்ப எதுகை மோனையுடன் பசப்பும் எழுத்தாளர்களாகவே யிருப்பது வழக்கம். உள்ளார்வ மிக்க நற்கவிஞர்கள் பெரும்பாலும் அரசவைக் கவிஞர்களாவ தில்லை. எனினும், டெனிஸன் ஒருவர் வகையில் பொதுப்பட ஒத்துவராத இவ்விரு பண்புகளும் ஒத்து வந்தன. அவர் அரசவை நட்புக்களைப்பற்றிப் பாடிய பாடல்கள்கூட அரசவையினர் மட்டுமே யல்லாமல் மற்றவர்களும், பிற்காலத்தவரும் போற்றும் தகுதியுடையவை யாகவே இருக்கின்றன. இம்மாதிரி காலச்சிறப்போடு கவிதைச் சிறப்பும் மிக்க அவர் பாடல்களுள், விக்டோரியா அரசியின் மூத்த புதல்வர் எட்வர்டுக்கு மணப்பெண்ணாக இங்கிலாந்துக்கு வந்த டென்மார்க் இளவரசி அலெக்ஸாண்ட்ராவுக்கு அவர் அளித்த மணவாழ்த்தும், நெப்போலியனை நிலப்போர்களில் வென்ற வெல்லிங்டன் கோமகன் இறந்தபோது இயற்றிப் பாடிய இரங்கற்பாவும் சிறந்தவை ஆகும்.