இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. கு.ப. ராஜகோபாலன் மறைந்து சில மாதங்களுக்குப் பின். அவர் சிறிதுகாலம் ஆசிரியப் பொறுப்பு ஏற்றிருந்த திருச்சி துறையூரிலிருந்து வெளியாகி வந்த 'கிராம ஊழியன்' மாதமிருமுறை பத்திரிசையில் 'பாரதி அடிச்சுவட்டிலே’ என்ற தலைப்பில் ஒரு புதிய கவிதையம்சம் வெளிவந்தது தொடர்ந்து. அதில் 'திங்கள்’ என்ற தலைப்பில் 'இளவல்’ என்ற புனை பெயரில் வந்த ஒரு கவிதையிலிருந்து சிலவரிகள் இதோ:
திங்களே
நீ வளர்ந்து பூர்ணமுறுகின்றாய்
பின் தேய்வது ஏன்?
ஏக்கமா,கவலையா,காதலா?
துக்கமா,வெறுப்பா,சோர்வா?
இருளைக் கொல்கிறாய் நீ
அந்த இருளே தின்றதோ உன்னை?
மீண்டும் மலர்கிறாய் ஓர் நாள்
அத்தோற்றம் கவர்ச்சி மிக்கது
உமையின் சிரிப்புப் போல.
ரசிக்கத்தக்கதாக இருந்த இந்த வரிகளே எழுதியவர் யாரென்று அப்போது தெரியாது எனக்கு. பிறகு தெரிய வந்தபோது அவர்தான் வல்லிக்கண்ணன். ஒரு வண்டி புனைபெயர்களுக்கு அடியில் ஒளிந்துகொண்டு 'வலது கையாலும் இடது கையாலும்' எழுதி பல இலக்கிய அம்சங்களை தொட்டு 'கிராம ஊழியன்' பொறுப்பாசிரியராக (1944-1947) அதன் பக்கங்களை நிரப்பியவர். புதுக்கவிதை முன்னோடி நால்வரில் ஒருவர். மேலே உள்ள கவிதை வரிகள் பாரதி அடிச்சுவட்டில் 'காட்சி' வழியில் அமைந்திருந்தாலும் புது நோக்கு கொண்டிருப்பதை உணர்கிறோம். பிறகு எழுத்துவோடு 1958-ல் உறவுகொண்டு அதிலும் மற்றவையிலும் தொடர்ந்து புதுக்கவிதைகள்