பக்கம்:அமுதவல்லி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109 அமுதவல்லி

என்று புலம்பினாள். குழந்தை மறித்திருக்க நியாயமில்லை என்றவரைக்கும் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. வழிப்போக்கர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் எனவும் திட்டமிட்டாள். உடனேயே வெறி பிடித்தது போல அந்தப் பாதையில் தொடர்ந்து நடக்கலானாள், காளிபோல. தவறி விழுந்த புகைப்படங்கள் அவளுடைய பார்வையில் பட்டால் தானே? பொழுது விடிந்தது தான் கண்ட பலன். குழந்தை கிட்டவில்லை!

 அண்டைக் கிராமத்தில் மூர்ச்சை போட்டுச் சாய்ந்துவிட்ட பொன்னரசியை நிலை உணர்ந்த நல்லவர்கள் காத்துப் பேணினார்கள். “ஏண்டா ராஜா என் வயித்திலே வந்து ஒண்டினே?... ஐயோ! நான் பேய்!” என்று தனக்குத் தானே பேசித் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு நாட்கள் சிலவற்றை ஓட்டினாள் அவள். புகல் கிடைத்த இடத்தில் ‘கழுகு’ ஒன்று வட்டமிடுவதை யூகித்த அவள் தன் வசமிருந்த பசி கொண்ட கத்தியின் துணையுடன் அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தாள். ஆஞ்சநேயர் சந்நிதியில் மண்டியிட்டு அழுது தன் தவற்றைப் பொறுத்தருளுமாறு கதறினாள். “என் குழந்தை உசிரோட இருக்குமா? என் கைக்கு திரும்பவும் கிடைக்குமா?' என்று ஆஞ்சநேயரிடம் மானசீகமாகக் கேள்வி விடுத்தாள். நல்ல பதிலே கிடைத்தது. அப்பொழுது அவளுக்குத் தன் உயிர் மீது ஒரு கவலையும் ஓர் அக்கறையும் ஏற்படலாயின. ‘ம்’ என்னோட மகன் எனக்குக் கிடைச்சதும், என்னை ஏமாத்தின அந்தப் பழி காரனை பழிவாங்கிப் பிடுறேன்!...' என்று சூளுரைத்துக் கொண்டாள்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/111&oldid=1376550" இலிருந்து மீள்விக்கப்பட்டது