இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12 அமுதவல்லி
"நீ இனிமே கண் கலங்காதேப்பா! நான் அம்மா கிட்டே உன்னைப்பத்தி ரொம்பத்தூரம் சொல்ல்லியிருக்கேன். இலையும் பழுப்பும் எல்லாருக்கும் சகஜந்தானே?...பெண்சாதி, பிள்ளை எல்லாரும் போயிட்டா நடப்பை சதா நினைச்சு மனசை அலட்டிக்காதே, வேலப்பா!" என்று தேற்றினான் அவன்.
கூப்பி வணங்கினான் வேலப்பன்.
அப்பொழுது எடுபிடிப் பையன் தலைதெறிக்க ஓடிவந்தான். தலை தெறித்து விடாமல் தப்பியது. ஆகவே தான் அவனால் தலையைச் சுற்ற முடிந்தது. பிறகு சொன்னான்: “அம்மா ஸ்டுடியோவிலேருந்து ஒங்களைக் கூப்பிடுறாங்க, மானேஜர் ஐயா!"
மொட்டை மாடியிலிருந்து கீழ்த் தளத்துக்கு வந்தான் சோமலிங்கம். குறுக்கிட்ட கிழவி “சீக்கிரமா வாங்க தம்பி! எம் மவ என்னா பேசுது, கேளுங்க!" என்றாள்.
சோமலிங்கம் சிரித்தவண்ணம் தொலைபேசி இணைப்பைக் கையிலெடுத்துக் காதில் பொருத்தினான். 'ம்...ம்' என்று ம் கொட்டிக் கொண்டிருந்தான் அவன். செய்தி வாங்கியைச் சரியாக வைத்துவிட்டுத் திரும்பினான். "அம்மா இன்னும் கால் மணிக்குள்ளே புறப்பட்டுடுவாங்களாம். விருந்துக்கு ரெடி பண்ணச் சொன்னாங்க. வந்தவங்களை ஹாலிலே உட்கார வைக்க வேணுமாம்!" என்று விவரித்துவிட்டு, வேலப்பன், வேதாசலம், கங்கு என்று பெயர்ப்பட்டியலை உரக்கப் படித்தான். சோமலிங்கம்.