பக்கம்:அமுதும் தேனும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கவிஞர் சுரதா



கோயிலுக்குத் தாழம்பூ உதவா தென்றால்
கூந்தலுக்கும் உதவாதா? உதவு மன்றோ?
வாயிலுக்கோர் தோரணத்தை எதிர்பார்க் கின்றேன்.
மறுபடியும் புதுவாழ்வை எதிர்பார்க் கின்றேன்
காயமிது பொய்யென்று சொல்கின் றீர்கள்
காற்றடைத்த பையென்று சொல்கின் றீர்கள்
ஈயமதை என்செவியில் ஊற்று தற்கோ
ஏந்திழைநான் உங்களையிங் கழைத்து வந்தேன்?

நின்றுநிலை பெறத்தக்க பாக்கள் பாடி
நிமிர்ந்தபுகழ் பெற்றவரே! தங்கள் தங்கள்
தன்னலத்தைக் கருதித்தான் உலகில் யாரும்
தவறுபல செய்கின்றார். மாலை யிட்ட
மன்னனுக்கு நான்மனைவி என்ற போதும்
மற்றவர்போல் நானுமொரு மங்கை தானே?
துன்மதியாண் டிற்பிறந்த பெண்ணாம் என்னைத்
துந்துபி விகாரியென வெறுத்தி டாதீர்.

ஊர்முழுதும் தீப்பற்றி எரியு மாயின்
உடனேபோய் அவ்வூரின் அருகி ருக்கும்
ஓர்குளத்தில் மூழ்குவதன் மூலம், ஊரில்
உள்ளவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடும்.
நீர்க்கடலுக் கடியில்நாம் இருந்திட் டாலும்
நிச்சயமாய் நமைக்காமம் சுடுமே மற்றும்,
ஊர்ப்புறத்தே உள்ளவொரு மலைக்குப் பின்னால்
ஒளிந்தாலும் விடுவதுண்டோ காம வெப்பம்?