பக்கம்:அமுதும் தேனும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

40



வான்கவிந்த வையகத்தில் பொய்யும் மெய்யும்
வழக்காடும் உலகத்தில் கருவுற் றிங்கே
ஏன்பிறந்தேன் என்றெண்ணி வருந்தும் என்னை
எதற்காக, வற்புறுத்து கின்றாய்? இன்பத்
தேன்பருகத் துடிப்பவளே! கீழ்வாய்ப் பற்கள்
சிரிப்பதற்குப் பயன்படுமா? சிந்தித் துப்பார்!
நான்துறவி? நான்யோகி என்று கூறி,
நள்ளிரவில் அவ்விடத்தை விட்டெழுந்தான்.

பாளையினால் இளநீரை மறைத்திட் டாலும்
பச்சிளநீர் சரியாக மறைவ தில்லை.
மாளிகையின் மாதரசி அவ்வா றாக
மார்பகத்தை மறைக்காமல் நெருங்கி நின்று
காளையிடம் மீண்டுமவள் வேண்ட லானாள்.
கற்றவனோ வெறுத்தபடி ஒதுங்க லானான்.
ஆளனில்லா விதவையவள் விளக்கை ஆங்கே
அணைத்திட்டாள். அவளிருந்தாள் அவனைக் காணோம்.