பக்கம்:அமுதும் தேனும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

கவிஞர் சுரதா



கத்துகடல் புதுவையில்நான் இருந்து வந்த

காலத்தில் படகோட்டிக் கொண்டி ருந்தேன்.

பத்திரத்தில் கையொப்ப மிட்டு, வெள்ளைப்

பட்டாளம் தனிற்சேர்ந்து பலரை வென்றேன்.

எத்தனையோ பேரெதிர்த்தும் நான்தான் வென்றேன்.

எனையெவரும் வென்றதில்லை என்று ரைத்தான்.

அத்திக்காய் ஆலங்காய் பழுக்கு மன்றி

அவரைக்காய் ஒருபோதும் பழுக்கா தென்றாள்.


சுரந்திருந்த மணற்கேணி யருகே அந்தச்

சுந்தரியும் சுந்தரனும் இறங்க லானார்.

வரந்தரவோ இங்கழைத்து வந்தீர் என்றாள்.

வரம்பெறவே உனையழைத்து வந்தேன் பெண்ணே!

விருந்தமிழ்தம் இனிவேண்டேன் உன்னை யன்றி

வேறெதையும் நான்வேண்டேன் என்று கூறிப்

பொருந்துபுகழ் மாவீரன் அவளைத் தொட்டான்.

பூங்கொடியாள் நல்லுடையை நழுவ விட்டாள்.


உனக்கென்ன வயதென்றான். பதினெட் டென்றாள்,

உன்வயதே ஜோனாஃப்ஆர்க் வயது மென்றான்.

எனக்கென்ன வயதிருக்கும் என்று கேட்டான்.

இருபத்து நான்குவய திருக்கு மென்றாள்.

தனித்துக்கம் இனிமேலா இனிக்கும்? வண்ணத்

தாமரையா சூரியனனக் கண்டு தூங்கும்?

பனிப்பூவே! பதினெட்டு வயதே! வாவா!

பால்நிலவே என்னருகில் நீவா என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதும்_தேனும்.pdf/8&oldid=1472200" இலிருந்து மீள்விக்கப்பட்டது