பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

 "உங்கள் பிள்ளையின் விளையாட்டைத்தான் இதோ நான் பார்க்கிறேனே. உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் படைத்த நாகங்களைக் குட்டிபோட வைத்து விட்டானே! அவனை உடனே பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களுக்குத் தடை ஏதாவது உண்டா?"

"தடையா? சமுகத்தின் கருணைப் பார்வைக்கு அவன் இலக்காவது பெரிய பாக்கியம் அல்லவா? அவன் இத்தகைய இடங்களுக்கெல்லாம் தன் தாயை விட்டுத் தனியே சென்றவனும் அல்ல. சிவிகையைக் கண்டால் அஞ்சுவான்.”

"நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் சிவிகையேறும் கவி மன்னர் ஆயிற்றே! அவன் சிவிகையைப் பாராதவனா?’’

"அதைச் சொல்லவில்லை. சமூகம் அனுப்பும் சிவிகைக்காரர்கள் இவ்விடத்துக்கு ஏற்ற மிடுக்குடன் இருப்பார்கள். அவர்களைக் கண்டால் அஞ்சி வர மாட்டேன் என்று சொல்லி அழுதாலும் அழலாம். குழந்தைதானே? மன்னருடைய அழைப்பின் அருமையை அவன் எங்கே உணரப் போகிறான்? ஆகையால் நானே அவனுக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லி ஒரு நல்ல நாளில் அவனை இங்கே அழைத்து வருகிறேன்.”

"இன்றே நல்ல நாள்தான். இந்த அருமையான பாடலைப் பாடும் ஆற்றலுடைய உங்கள் குழந்தை பயப்படுபவன் என்று நான் நினைக்கவில்லை. அவன் இப்போது இங்கே வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லைபோல் இருக்கிறது!"

புலவருக்குத் தம் எண்ணத்தைக் கூறத் தைரியம் இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல், விழித்தார்.