பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


 முதலியாருடைய சிலந்தி ஓரளவு குணமாயிற்று. அரசன் அழைத்தபோதே செல்லவேண்டும் என்ற மனவேகம் அவருக்கு இருந்தது. ஆனால் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல நடக்கலாம் என்ற தைரியம் வந்தவுடன், அரசவைக்கு வருவதாகச் சொல்லி அனுப்பினார். அரசனும் பிறரும் அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

வழக்கப்படி தக்க கையுறைகளோடு சடையப்ப வள்ளலார் அரசனது அவைக்களத்தில் புகுந்தார். அரசன் அன்பு ததும்ப, "வாருங்கள், வாருங்கள்.உடம்பு எப்படி இருக்கிறது? இங்கே அமருங்கள்" என்று உபசரித்தான். வள்ளல் மன்னனுக்கு அருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உடம்பு முழுவதையும் பார்த்தான் அரசன். பின்பு அவர் உடுத்திருந்த துகிலைப் பார்த்தான். பெரு விலை கொடுத்து வாங்கிய அற்புதமான ஆடைதான் அது. மிக மிக மெல்லியதாக இருந்தது. உடம்பு தெரியும்படி இருந்தாலும், சில சில இடங்களில் பூ வேலை செய்து கவசம் இட்டாற்போல அமைந்திருந்தது. அதையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த மன்னனிடம், "அவ்வளவு கூர்மையாக மன்னர் பிரான் எளியேனைப் பார்ப்பது என்னைக் கூசக் செய்கிறது" என்றார் வள்ளல்.

இந்த ஆடையின் வரலாற்றைக் கேட்டோம். சிலந்தி வலை பின்னியது போல் இருக்கும் இது உண்மையிலேயே சிறந்த துகில்தான். உங்கள் துடையில் சிலந்தி வந்ததாமே; சிலந்தியிருந்த இடத்தில் சிலந்தி நூல் போன்ற இது இருப்பது பொருத்தமாக இருக்கிறது. நல்ல வேளை! சிலந்தி போய்விட்டதல்லவா?”

அமைச்சர்கள் அரசனது சாதுரியத்தை அறிந்து மனத்துள் வியந்தனர்.