பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலியை நாடிய வள்ளல்

"இப்படி, அடிக்கடி சிறுத்தைப் புலி மாட்டை அடிப்பதாக இருந்தால், நாம் எல்லாம் இங்கு வாழ்ந்து என்ன பயன்?" என்றார் ஒருவர்.

"சிறுத்தைப் புலியா, பெரிய புலியா என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. சிறுத்தைப் புலியாக இருக்கலாம்" என்பது ஊகமே அன்றி, நேரிலே கண்டவர் யாரும் இல்லை என்றார் மற்றொருவர்.

"எந்தப் புலியாக இருந்தாலும் அதை விட்டுவைக்கக் கூடாது. பெரிய புலியாக இருந்தால் இன்று மாட்டைக் கடிப்பது நாளைக்கு மனிதனையும் கடிக்கும். ஆகையால், உடனே அதைத் தொலைக்க வழி தேடவேண்டும்” என்றார் முன்னே பேசினவர்.

ஊருக்குச் சற்றுத் தொலைவில் பெருங் காடு ஒன்று இருந்தது; சிறு குன்றும் இருந்தது. அந்தப் பக்கங்களில் புலி ஒன்று உலவுவதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஓரிரண்டு மாடுகள், காட்டுக்குள் மேயப் போனவை திரும்பி வரவேயில்லை 'புலிதான் அடித்துத் தின்றிருக்க வேண்டும்' என்று உறுதியாக நம்பினர். ஆனால், துணிந்து யாரும் நுழைந்து அந்தக் காட்டுக்குள் சென்று. பார்க்கவில்லை.

கொங்கு நாட்டில் கோபிசெட்டி பாளையத்திற்கு அருகில் பாரியூர் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊர்க்காரர்களுக்குத்தான் புலியைப்பற்றிய அச்சம் உண்டாயிற்று. 'புலியை ஒழிக்க வேண்டும்' என்று யாவரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் ஒருவரும் புலியோடு சண்டையிட முன்வரவில்லை.