பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புதுத் தாலி

சிவகங்கையில் மருத பாண்டியர் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலம். குன்றக்குடிக் குமரனுக்கு அடிமைப்பட்ட அக்குறுநில மன்னர் அத்தலத்தில் பல வகையான திருப்பணிகளைச் செய்தார். அவருடன் இருந்த நண்பர்களும் முருகனிடம் மாறாத அன்பு பூண்டவர்கள். அடிக்கடி மருதபாண்டியர் அவர்களுடன் குன்றக்குடி சென்று முருகப் பெருமானைத் தரிசித்துக் கொண்டு வருவார்.

அவருக்குத் தமிழ்ப் புலவர்களிடத்தில் மிக்க அன்பு உண்டு. சர்க்கரைப் புலவருடைய வம்சத்தில் உதித்த குழந்தைக் கவிராயர் என்பவர் அவருடைய அவைக் களப் புலவராகவும் தோழராகவும் விளங்கினர். குன்றக் குடிக்கு மயூரகிரி என்று ஒரு பெயர் உண்டு. அந்தத் தலத்தைப்பற்றி ஒரு கோவை இயற்றி அரங்கேற்றினார் அக் கவிராயர். மயூரகிரிக் கோவை என்பது அந்த நூலின் பெயர்.

மருத பாண்டியருடைய அவைக் களத்தில் வீரர்களும் புலவர்களும் குழுமியிருப்பார்கள். அடிக்கடி வேற்று நாடுகளிலிருந்து தமிழ்ப் புலவர்கள் வந்து அவரோடு அளவளாவுவார்கள். அப்புலவர்களுடைய கவிச்சிறப்பை அறிந்து பாராட்டிப் பரிசு வழங்குவார் மருத பாண்டியர்.

ஒருநாள் புலவர் ஒருவர் தம் மனைவியுடன் புறப்பட்டுக் குன்றக்குடிக்குச் சென்றார். முருகப் பெருமானைத் தரிசித்து இன்புற்றார். புதிய திருப்பணிகள் பல அங்கே நடந்திருப்பதையும், பின்னும் நடந்துகொண்டிருப்பதையும் கண்டார். எல்லாம் மருத பாண்டியருடைய அறச் செயல்கள் என்பதைக் கேட்டார். இதற்கு