பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


முன்னும் அவருடைய புகழை ஓரளவு கேட்டு உணர்ந்திருந்தாலும், இப்போது அவருடைய இயல்புகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டார். அவர் புலவர்களுக்கு மதிப்பளிப்பவர் என்பதை அறிந்தபோது புலவருக்கு ஒரு விருப்பம் எழுந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இப்படியே சிவகங்கைக்கும் போய் அந்த வள்ளலைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று எண்ணினர். அந்த ஊருக்குப் போகும் வழியை விசாரித்து வைத்துக்கொண்டார். சிவகங்கையிலிருந்து குன்றக்குடிக்கு அடிக்கடி வண்டிகள் வரும். மருத பாண்டியர் சில சமயங்களில் குதிரையில் ஏறி வருவார். அவ்வாறு வரும் வழி ஒன்று இருந்தது.

இவற்றையெல்லாம் அறிந்துகொண்ட புலவர் தம் மனைவியுடன் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டார். இடையிலே சில ஊர்களில் தங்கிச் சென்றார். கடைசியில் சிவகங்கைக்கு அருகில் உள்ள ஓர் ஊரை அடைந்தார். அங்கே பகலில் உணவு கொண்டு இளைப்பாறினார். அன்றே சிவகங்கைக்குப் போய்விட வேண்டும் என்னும் ஆவல் அவருக்கு எழுந்தது.மெல்ல நடந்து போய்விடலாம் என்று நினைத்தார். அவர் தனியே இருந்தால் யோசனை செய்யாமல் புறப்பட்டிருப்பார். தம்முடன் தம் மனைவியையும் அழைத்துச் செல்வதனால் சிறிதே தயங்கினார்.

அப்போது நிலாக் காலம். ஒரு கால் சூரியன் மறைந்தாலும் நிலா ஒளியில் வழி கண்டு, போய் விடலாம் என்ற தைரியம் அவருக்கு இருந்தது. 'வழியில் யாரேனும் திருடரால் பயம் உண்டானால் என்ன செய்வது?' என்ற அச்சம் அவர் மனைவிக்கு வந்தது. மருத பாண்டியர் பெருவீரர் என்றும், பொல்லாதவர்கள், அவருக்கு அஞ்சி நடுங்குவார்கள் என்றும் புலவர் கேள்வியுற்றிருந்தார். ஆதலின் அப்படி ஒன்றும்