பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


புலவரும் அவர் மனைவியும் நீராடினர்கள். பூ, பழம், புதுப்புடைவை, புதுவேட்டி, திருமங்கலியம் ஆகியவற்றை வைத்து, "புலவரே, என் நாட்டில் நடந்த அக்கிரமத்தைக் கேட்டு நான் அடைந்த வருத்தம் பெரிது. ஆனல் அந்த அக்கிரமத்தினால் ஒரு நன்மை உண்டாயிற்று. இரண்டாம் முறை உம்முடைய திருக்கையால் இந்த மங்கலியத்தைக் கட்டுங்கள். உங்கள் திருமணம் நடந்தது எங்களுக்குத் தெரியாது. இப்போது அந்தக் காட்சியைக் கண்டு களிக்கிறேன்" என்று கூறித் தாம்பாளத்தை நீட்டினார்.

புலவர் மனைவி புதுப்புடைவை அணிந்து புது மங்கலியத்தை அணிந்தாள். புலவரும் புத்தாடை புனைந்து புது மாப்பிள்ளையாக விளங்கினார். அன்று விருந்துணவு உண்டு களித்தனர் இருவரும். புலவர் மனைவிக்கு வேறு அணிகலன்களும் வழங்கினர் சிவகங்கைத் தலைவர்.

சில நாட்கள் புலவரும் அவர் மனைவியும் அரண்மனை விருந்தினர்களாகவே இருந்தார்கள். அதற்குள் மருத பாண்டியர் தக்க ஆட்களின் மூலம் திருடர்களைக் கண்டு பிடித்துத் தண்டித்தார்.

மருத பாண்டியர் புகழைப் பாட்டால் உரைத்தார் புலவர். பிறகு பலவகைப் பரிசில்கள் பெற்று விடை கொண்டார்.

"இனிமேல் நீங்கள் வருவதை ஆள்மூலம் தெரிவியுங்கள். நான் வண்டி அனுப்புகிறேன். வழி நடந்து துன்புற வேண்டா" என்று கூறிப் புன்னகை பூத்தார் பாண்டியர். புதிய அலங்காரங்களோடு உவகையில் மிதந்த தம் மனைவி தம்மைத் தொடர்ந்து வரப் புலவர் புது மாப்பிள்ளையைப் போலப் புறப்பட்டார்.