பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

"சோழ நாட்டின் பெருமையை என்னவென்று சொல்வது! தமிழ்நாட்டுப் பேரரசர் மூவர். அந்தத் தண்டமிழ் அரசர் மூவருக்குள்ளும் அரசு என்பதற்குரிய இலக்கணங்களெல்லாம் நிரம்பியவன் நீதான். சோழ நாடு வளத்திலே சிறந்தது. மழையில்லாமல் பிற நாடுகளெல்லாம் பஞ்சத்தால் துன்புறும் காலத்திலும் காவிரி வற்றாமல் ஓடுவது. அதன் நீரால் சோழ நாடு வளம் பெறுகிறது. வேற்று நாட்டான் ஒருவன் இந்த நாட்டுக்கு வந்து பார்த்தால், இங்கே காடுபோலப் பரந்திருக்கும் கரும்பைக் கண்டமாத்திரத்திலே இந்த நாட்டின் செழிப்பை உணர்ந்துகொள்வான். வறுமைப் பகைவனை வதைக்கும் வேலைப்போல வெள்ளைப் பூவோடு தலைநிமிர்ந்து நிற்கும் கரும்பின் காட்சியே காட்சி!"-இவ்வாறு நாகனார் சோழ நாட்டின் வளத்தை எடுத்துச் சொல்லச் சொல்லக் கிள்ளிவளவன் கேட்டுக் கொண்டே வந்தான்; கேட்கக் கேட்க அவன் உள்ளம் பெருமிதம் அடைந்தது.

"இத்தகைய செல்வம் மிக்க நாட்டுக்கு அரசனாக இருக்கும் உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்" என்று புலவர் நிறுத்தினார்.

"அப்படியா? சொல்லுங்கள் கேட்கிறேன். என்னால் ஆகவேண்டியது எதுவானாலும் செய்கிறேன்" என்றான் அரசன்.

"காவிரிக்கு நீர்வளம் மழையால் உண்டாகிறது. நாம் நினைத்தபோது நினைத்த காரியத்தை ஓரளவு தான் செய்ய முடியும். சில காரியங்கள் நம் கையில் இல்லை. மழை பெய்ய வேண்டுமென்று நாம் எண்ணினால் அது உடனே பெய்யாது. ஆனால் அரசர்கள் மழையைப் பெய்யும்படி செய்வார்கள்."

"அது எப்படி முடியும்?"