11
ரித்து, அதனுள்ளே அமைப்பர்; அவனி காவலர் அக்கவி கண்டு மகிழ்வர்; மக்கள், கவியின் திறத்தை மட்டுமல்ல, அவர் கூப்பிடும் குரலுக்குத் தேவரும் மூவரும் ஓடோடி வருவர், கவிகள் விரும்பினால் கல்லை உருகச் செய்வர், புலியைப் பாடச்செய்வர் என்று நம்பி, அடி பணிவர். சில காலத்துக்குப்பிறகு அத்தகைய கவிகளிற் சிலர், கோயில் கட்டிக் கும்பிடத்தக்கவர்களாக்கப்பட்டுவிடுவர். கவிகளின் நிலைமை இதுவாக இருந்து வந்தது கவி ஓர் அபூர்வப்பிறவி, அற்புத ஜாலக்காரன் கடவுளின் அருள் என்னும் கைக்கோலை வைத்துக் கொண்டு அதன் உதவியால் பிறர் காணமுடியாததைக் கண்டு, பிறர் கூற முடியாததைக்கூறும் அதிசயச் சக்தி பெற்றவன் என்று மட்டுமே மக்கள் கூறிவந்தனர்.
புன்னகை பெறுவர் கவிகளைக் கேட்டு; புண்யம் வருமென்பர் அவைகளைக்கேட்டதன் பயனாக; பிறகோ பெருமூச்செறிவர். அவர்போல் நாமென்ன அருள் பெற்றவரா கவிபாட என்று. கவிதை எவ்வளவுக்கெவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ, புரியாததாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் மதிப்பு உயர்ந்துவிடும். கவிதையின் கருத்து எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் அறிவுப் போக்குக்கும் தொடர்பற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு இதற்கு மதிப்பு அதிகரிக்கும்.
"நீல நிற வானமடி நிர்மலனின் தேகமடி" என்று பாடி இருப்பார் கவி; மக்கள் நீல நிற வானத்தைக் கண்டுள்ளனர். நிர்மலனைக் கண்டதில்லை. புரிந்த ஒன்றைப் புரியாத இன்னொன்றுக்கு உவமையாக்குவார் கவி; புரியாது மக்களுக்கு, சரியா? தவறா? என்று.