29
உறுதிக் கவிஞர்
உறுதி! தோற்றத்தில், பார்வையில், உடலில், உள்ளத்தில், குரலில், உதட்டின் அசைவில், வெளிவருஞ் சொல்லில், அச்சொல் இசைத்து நிற்கும் பாட்டில், அதன் பொருளில் அனைத்திலும் உறுதி! உறுதி!!
இந்த ‘உறுதி’ தான் பாரதிதாசன். வர்ணாசிரம வைதீகத் தீயில் கருகாத பொன்னென ஒளிர்ந்து மத மூடப் பழக்க வழக்கங்களை முடியடித்த அறிவுத் தூய்மையுடன் விளங்கி, நல்லுணர்வை தட்டியெழுப்பும் நன்மணியெனச் சிறந்து வருபவர் தான் பொற்றூயமணி புரட்சிக் கவிஞர் ஆவர்.
மக்கள் மனதிலும், மன்பதை (சமூக) நிலையிலும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் விளைவிக்கக் கொண்ட உறுதியன்றோ கவிதைகளில் விளையாடுகின்றது?
தன்னம்பிக்கையுந் தாழ்வற்ற உள்ளமும், தமிழ்க் கவிதையிலே ஓர் புதுமையையும், தமிழர் வாழ்விலே ஓர் எழுச்சியையும், நாட்டிலே ஓர் புரட்சியையும் தோற்றுவித்திருப்பதையும் நாம் உணர வேண்டும். ‘ஓடப்பர், உணர்வப்பராகி, உதையப்பராகி விட்டால், உயரப்பர் ஓடப்பரெல்லாம் ஒப்பப்பர் ஆகி விடுவார்’ என்பதிலேயே கவியின் புரட்சி உள்ளமும் உறுதியும் காணக்கிடக்கின்றன.
புரட்சியை வரவேற்கும் கவி, ஒற்றுமையை அதற்குத் துணையாக்கி, உதையை அதன் செயலாக்கி,