பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் கதை மாந்தரும் 11


தக்கதே. எனவே, கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவரே. மறைமலை அடிகளார், ரா. பி. சேதுப்பிள்ளை, ரா. இராக வையங்கார் முதலிய தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து, கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதே.

ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி. பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136.1150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களப் புலவரா யிருந்தவர்; இம் மூவர்மேலும் ‘உலா’ பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் “மூவர் உலா” என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது தெளிவுறும்.

‘கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவர் அல்லர் ; எனவே, கம்பர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினரே’ என்பவரின் கருத்துப் படி கம்பரையும் கூத்தரையும் காலத்தால் பிரித்துவிடினும், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டின ராகார். இதற்கு உரிய சான்றாவது:

கம்பர் சோழ அரசோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் இறுதியில் முரண்பாடு கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறினர் என்பதையும் பெரும்பாலும்—பலரும் ஒத்துக் கொள்கின்றனர். கம்பர் தொடர்பு கொண்டிருந்த சோழன் பேரரசனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கூற வியலாது. ஏனெனில், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசு இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. கி. பி. 879—897ஆம் ஆண்டுக் காலத்தவனாகிய அபராசித பல்லவன் காலம்வரை சோழநாடு பல்லவ அரசின்கீழ் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனாகிய விசயாலயச் சோழன் (கி. பி. 850-870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனாய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது, தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்தனர். நாளடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று. தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.