பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அம்பிகாபதி காதல் காப்பியம்

நிலவே நிலவே நீகீழ் இறங்கி
வருகை தருவையோ வாரா யென்னின்

70 அருகில் யான்வந் தழகைப் பருகவோ?
மாற்றம் என்கொல் மயக்குதல் முறையோ?
கூற்றமாய் என்னைக் கொல்லல் தகுமோ?”
என்றனன்; அமரா வதியின் எதிரில்
நின்றனன் சிலைபோல் நெட்டுயிர்ப் பெறிந்தே!

(கேட்ட அமராவதியின் நிலை)

75 கேட்ட அமராவதி கிளர்ச்சி யுற்றனள்,
நாட்டந் திருப்பினள், நாணிக் குனிந்தனள்;
பொன்னிறத் திருமுகம் செந்நிற மாயது;
புதியவன் உளத்தில் புகநேர்ந்த தெண்ணி
மதியது கலங்கி மாழ்கி வீழ்ந்தனள்.

80 தோழியர் கவன்றனர்; சோழனைக் கண்டனர்;
வாழியர் வேந்தென வணக்கம் செலுத்தினர்;
நடந்தது கூறினர் நாத்தழு தழுக்க.
கிடந்த மகளைக் கிள்ளி கண்டனன்;
விடிந்ததும் இதற்கோர் விடிவு காண்பனென்

85 றடங்காச் சினத்திற் கடிமைப் பட்டனன்;
மகளைக் கன்னி மாடத் துய்த்தே
அகலாது காக்க ஆவன புரிந்தனன்.
சோழமா தேவி சோர்ந்து வருந்தி
வாழி மகளென வணங்கினள் தெய்வம்.

(அமைச்சர் மகளின் காதல்)

90 அமரா வதியை அகலாப் பாங்கி
அமைச்சர் மகளாம் அழகு தாரகை'

71. மாற்றம் - பதில். 72. கூற்றம் - எமன். 74. நெட்டுயிர்ப்பு எறிதல் - பெருமூச்சு விடுதல். 79. மாழ்கி - மயங்கி. 80. கவன்றனர் - கவலைப்பட்டனர். 83. கிள்ளி - சோழன்.