இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை
61
(அம்பிகாபதி)
நச்சுதல் என்பது நட்பொடு நிற்குமோ?
மெச்சும் காதலாய் மேலும் வளருமோ?
185 அச்ச மின்றிதை யறிவிப் பாயென,
(அமராவதி)
நட்பாம் மொக்குள் நாளே காதலாய்ப்
பெட்பொடு மலர்ந்து பெருமணம் வீசுமிக்
காவகம் வந்து காலம் நீண்டது;
காவலர் காணின் கடுந்துயர் நேரும்;
190 நாளை யீண்டிதே நள்ளிருள் செறியும்
வேளை வருகென வேண்டி மறைந்தனள்.
வறிஞன் பெற்ற வைப்பிழந் தாலென
அறிஞன் அம்பிகாபதி அயர்ந்துசென் றனனே
186. மொக்குள் - அரும்பு, மொட்டு. 187. பெட்பு - அன்பு, ஆசை, விருப்பம். 188. காவகம் - சோலை. 192. வைப்பு - நிதி.