பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கொள்ளும் படியானவர்களுக்கு ஏழைகளின்மீது இதக்கம் உண்டாமோ, ஒருக்காலும் உண்டாகாது. காரணம்:-

தற்காலம் இந்தியர்களின் இதக்கமின்மெயேயாம். இதக்கமும் மாநூஷீக தண்மெயும் இருக்குமாயின் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களாக திராவிட, பௌத்தர்களை அழித்துவிடவேண்டும் என்னும் எண்ணத்தினால் பறையர்கள் என்னும் தாழ்ந்தசாதிகளென வகுத்து கழுவிலுங் கற்காணங்களிலும் வசியிலும் வதைத்துக் கொன்ற பாவிகள் இன்னும் அவ்வஞ்சகம் நீங்காமல் கிராமங்களிலுள்ளப் பறையர்கள் என்போர் வீடுகளின் ஓரமாகத் திண்ணைகளை வைத்து கட்டவிடாமலுஞ் சுத்த சலங்களை மொண்டு குடிக்கவிடாமலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கேனுந் தக்க கூலி கொடாமலும் பொது சத்திரங்களில் தங்கவிடாமலும் வதைப்பார்களா, வதைக்க மாட்டார்கள். தற்கால இந்தியர்கள் என்போர் இதக்கமும் மானுஷீக தண்மெயும் அற்றவர்களேயாவர். ஆதலின் இப்பஞ்சகாலத்தில் ஆங்கிலேயர் செய்துவரும் முயற்சியை இகழ்ச்சியாகக் கூறி இதக்கமுற்றவர்போல் நடிக்கின்றார்கள்.

இவர்கள் நடிப்பு எதார்த்தமாயின் இந்தியருக்குள் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் பெரும்படியானவர்கள் யாரேனும் முன்னுக்கு வந்து தங்கள் பணங்களைக் கொடுத்து பஞ்சத்தில் பாடுபடும் ஏழைகளைப் பாதுகாக்கின்றார்களா அதுவுமில்லையே. கொடுக்கவும் கையாலாகாது, விடுக்கவும் ஆசைவிடாத பாவிகள் இப்பஞ்சகாலத்தில் கொடுத்து ஆதரிக்கும் ஆங்கிலேயர் மனதையும் புண்படுத்தப்பார்க்கின்றார்கள். ஆனால் ஆங்கிலேயர்களோ சாதிவேஷம்போட்டு சகல குடிகளையும் கெடுக்காமல் நீதிவேஷத்தினின்று நெறியைக் கையாடுவோர்களாதலின் இவர்களது கெடுமதிச்சொல் அவர்கள் நடுநெறியிலேறாவாம்.

சுதேசிகள் என வெளிவந்தோர் சுதேச ஏழைகள் பஞ்சகாலத்தில் படுங் கஷ்டங்களை உணர்ந்து அவர்களை ஆதரிக்கவேண்டிய முயற்சியிற் சிறந்து கனவான்களின் திரவியங்களை இரந்து ஏழைகள் அடைந்துள்ள பஞ்சத்தை நிவர்த்திப்பார்களாயின் இவர்களே எதார்த்த சுதேசிகளாவர். அங்ஙனமின்றி ஓட்டுப்பெயர் எழுதி மொட்டைக் கடிதாசிகள் விடுத்து பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரை வீண் விரோதத்திற்கு உள்ளாக்குவதே சுதேசியம். பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இந்திய சக்கிரவர்த்தினி மாதா குயின் விக்டோரியம்மைக்குப் பட்டங்கட்டியகால் இல்லாத சுதேசிய மாதா இப்போது எங்கிருந்து தோன்றினாள். இவ்விந்துக்களின் சுதேச மாதாவை யீரோஷியர் எற்பரோ, மகமதியரேற்பரோ, சுதேசக் கிறிஸ்தவர்களேற்பரோ, அறுபதுலட்சத்திற்கு மேற்பட்ட சாதிபேதம் இல்லா திராவிடர்கள் ஏற்பரோ, ஏற்கார்கள்.

- 1:51; சூன் 3, 1908 -

அதாவது ஓர் தமிழ்ப்பத்திராதிபர் பஞ்சகாலத்தில் ஆங்கிலேயர் படும்பாடுகள் யாவும் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு செய்துவருகிறார்கள் என்று பொறாமேயால் போதித்துள்ள போதிலும் மற்றோர் தமிழ்ப்பத்திராதிபர் இருப்புப்பாதைப் போட்டிருக்குஞ் சுகம் யாவும் இங்கிலீஷ்காரருக்கே என்று இருமாந்துக் கூறும் இவரது விருத்திபுத்தியை என்னென்று கூறுவாம். இவரும் இவரது பந்துக்களும்கூடி இன்னும் ஓர் இருப்புப்பாதையை ஏற்படுத்தி இல்லா சுகத்தையேன் அனுபவிக்கப்படாது. சேர்த்த பணத்தை சிலவுஞ் செய்யார்கள். பார்த்தசுகத்தை பொருக்கவும் மாட்டார்கள்.

இத்தகைய பொறாமெய் குணம் வாய்த்த இன்னும் பத்து விவேகிகள் இந்தியாவில் இருப்பார்களாயின் இருக்கும் சுகமும் கெட்டு கலிக்காவதாரம் எப்போது தோன்றும், இந்திய மாதா எப்போது வருவாளென்று இஞ்சித்தின்னக் குரங்கைப்போல் இளிக்கவேண்டி வரும்.

இருப்புப்பாதை ரதங்களில் இந்தியர்களுக்கு எத்தனை ரதங்கள் பூட்டப்பட்டிருக்கின்றது. ஐரோப்பியர்களுக்கு எத்தனை ரதங்கள் பூட்டப்பட்டிருக்கின்றது. இந்தியர்கள் எத்தனை உற்சவப் பிரயாணம் செய்கின்றார்கள்.