பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 71


இதன் கருத்தை உணர்ந்த சுதேசமித்திரன் பத்திராதிபர் தான் வெளியிட்டுள்ள அக்டோபர்மீ 10உ சனிவாரத்திய பத்திரிகையில் பச்சையப்பமுதலி தர்மங்கள் என்னும் முகப்பிட்டு அதன் கடைசியில் “பச்சையப்பமுதலியார் ஜாதி மதவேற்றுமை உணர்ச்சியை மனதிற் கொண்டு தர்மஞ் செய்தாரோ நாமறியோம். பொதுவிஷயங்களில் வேற்றுமை உணர்ச்சியை மனதில் கொண்டு பார்க்கும்போது தான் அவ்வேற்றுமை உணர்ச்சி இருக்குமேயன்றி அதை மறந்து பார்க்கும் பட்சத்தில் அது தோன்றாது இதனை அநுபவத்தில் அறியக்கூடும்” என்பதாய் சாதிபேதம், சமய பேதங்களை அற்றவர்போல் வரைந்திருக்கின்றார்.

இத்தகைய சாதிபேத உணர்ச்சிகளை இவர் அற்றிருப்பாராயின், பச்சையப்பன் தன்மசத்திரங்களிலும், பச்சையப்பன் கலாசாலைகளிலும், பச்சையப்பன் நிதிப்பெயரிலும், பச்சையப்பன் கலாசாலை, பச்சையப்பன் தன்மசத்திரம், பச்சையப்பன் தன்மநிதி என்று கல்லுகளில் அச்சிட்டிருப்பதை இவர் கண்ணாரக் கண்டிருந்தும் இவர் எழுதும் பத்திரிகையில் பச்சையப்பனுக்கு இல்லாத சாதியை நிலைபடுத்த வேண்டும் என்னும் உணர்ச்சியா அன்றேல் சாதிகளைத் தவிற்கவேண்டும் என்னும் முயற்சியா இவரது கருத்தை விசாரிணைப்புருஷர் உணரற்பாலதே.

இவ்வகையாய் தன்மசொத்தைப் பாதுகாக்கும் விஷயங்களிலும், பரிபாலிக்கும் விஷயங்களிலும் சுயநலங்கருதுவோர் சிலர் பொதுநலம் கருதுவோர் சிலராய் இருப்பார்களாயின் தன்மபூர்த்தி பெறுமோ.

ஏதோ ஓர் பிரபுவின் தன்மசொத்தைக் கொண்டு பரிபாலிக்கும் விஷயத்தில் இந்த வகுப்பார் அந்த வகுப்பாரென்னும் பேதப்போர் உண்டாயின் சுயராட்சியபாரத்தை யார் தாங்குவார்கள் என்று உணரவேண்டும்.

இந்த வகுப்பார் தந்திரங்களையும், அந்த வகுப்பார் தந்திரங்களையும் ஆராய்ந்து ஓர் காரியங்களைச் செய்யாவிடின் ஒருவகுப்பாரே மலிந்து உள்ளதையும் தங்கள் வயமாக்கிக் கொள்ளுவார்கள் என்னும் பீதியால் பல வகுப்போரும் விழித்துக் கொண்டார்கள்.

அவ்வகை விழித்தும் சரியாகப் பார்த்தோரில்லை. எவ்வகையில் என்னில், ஓர் மனிதன் தருப்பைப் புல்லைக் கையில் ஏந்திக் கொண்டு வந்து நான் பிராமணன் நான் பிராமணனென்பானாயின் அவனை சரிவர விழித்துநோக்காமலும் இவன் நம்மெய்ப்போன்ற மனிதனா அன்றா என்று பாராமலும் இவன் நமக்கு ஏதேனும் வித்தைகளைக் கற்பிக்கக்கூடியவனா என்று உணராமலும் யாது விசாரிணையும் இன்றி அவனை சுவாமி சுவாமியென்று வணங்கி கும்பிடும்படியான நாம், குண்டு மருந்து ஒருபுறமும், துப்பாக்கி பீரங்கி ஒருபுறமும் வைத்துக் கொண்டு நீதிநெறிகளாம் செங்கோலைக் கையேந்தி சீருஞ் சிறப்புஞ் செய்துவரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தோரை எதிர்த்து நிற்பது என்ன காலக்குறைவோ, யாது விபரீதமோ, யாவர் தூண்டுதலோ விளங்கவில்லை.

கட்டுசாதமும், ஒருவர் கற்பனாசெயலும் நெடுநாளிருக்கமாட்டாது. நடுநாளில் அழிந்துபோம். அக்கால் துயருரும்படி நேரும்.

அதற்குப் பகரமாய் சிலநாட்களுக்கு முன்பு எழுதிவந்த பத்திரிகைகள் யாவிலும் இராஜாங்கத்தோர் ஒருவரைக் கண்டித்தாலும், தண்டித்தாலும் அதனை வரைந்து தங்கள் வித்தியா விருத்தியைக் காட்டிவந்ததினால் அதனைக் காணும் பத்திராதிபர்களும் முன்பின்பாராது அவர்களைப் பின்பற்றி நின்றார்கள். இதனை வரைவது தகுந்ததாதென்னும் பகுப்பின்றி ஏனையோர் வார்த்தைகளையும், ஏனையப் பத்திரிகைகளையும் பின்பற்றி இராஜ விரோதங்களைப் பெருக்கிக் கொண்டதினால் தானுந் தனது பந்து மித்திரர்களும் பெருந்துக்கத்தில் ஆழும்படி நேரிட்டது.

இப்பெருந் துக்கத்திற்குக் காரணம் நாம் ஆய்ந்தோய்ந்து பாராமல் செய்யும் செயல்களும்,

- 2:19; அக்டோபர் 21, 1908 -