பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 / அயோத்திதாசர் சிந்தனைகள்


எல்லோரையும் மனிதசீவர்கள் என்று உணராமல் அவன் சாதியில் தாழ்ந்தவன். நான் சாதியில் உயர்ந்தவன் என்னும் பொறாமெயும், அவன் சுவாமிக்குப் பரத்துவமில்லை, என்சுவாமிக்குப் பரத்துவம் உண்டென்னும் பற்கடிப்பும், அவன்பாஷை அகரபாஷை, என்பாஷை தேவபாஷை என்னும் இருமாப்புக் கொண்டு எண்ணங்கள் யாவிலும் சாதிசமயக் களிம்பேறி நீதிநெறிகள் அற்றிருப்பதினால் சொற்ப சுகமும், மீளாதுக்கமும் அநுபவித்து வருகின்றோம்,

ஆங்கிலேயர்கள் தங்களுடைய பாஷையை விரித்து எழுதக்கூடியதும், சுருக்கி எழுதக் கூடியதுமாகிய வித்தைகளைக் கண்டுபிடித்துவருவது மன்றி விரல்களால் அச்சிடக்கூடிய, சிறிய அச்சியந்திரங்களும், பெரிய அச்சியந்திரங்களும் கண்டுபிடித்து தாங்களும் தனவிருத்தி அடைவதுமன்றி ஏனையோரையும் சீவனவிருத்தி அடையச் செய்து வருகின்றார்கள்.

நமது தமிழ்பாஷையையோ பூர்வத்தில் விருத்திபெற்றுவந்த இலக்கியங்களையும், இலக்கணங்களையும் பாழாக்கிவிட்டு அதன் சிறப்பையும் கெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

நமது தேயத்தில் பெருகியிருக்கும் வித்தைகள் யாதெனில் பிராமணர்கள் என்ற விஷயத்தில் ஒருவர் வீட்டில் ஒருவர் புசிப்பதும், கொடுப்பதும், கொள்ளுவதும் இல்லாதுமாகிய எத்தனையோ பிரிவுகள் பெருகியிருக்கின்றது.

இதன்மேறையே முதலியார், செட்டியார், நாயுடுகாரிவர்களும் பெருகிக்கொண்டு ஒருவருக்கொருவர் உயர்த்தியும் தாழ்த்தியும் ஒற்றுமெய்க்கேட்டை விருத்தி செய்துவருகின்றார்கள்.

சாதிவித்தைகளின் சிறப்பும், அதன் பெருக்கும் விபரீதமாக விருத்தி அடைந்து வந்த போதிலும் மதவித்தைகளின் பெருக்கமோ எனில் சிவமதவித்தைகள் பெருகியவுடன் விஷ்ணுமத வித்தைகள் பெருகிற்று. அவற்றிற்கு மேலென்னும் வேதாந்தமத வித்தை பெருகிற்று. அதன்பின் பிரம்மசமாஜமதவித்தைப் பெருகிற்று. இம்மதங்களின் வித்தை விருத்திகள் மாறுதல் அடைவதால் தற்காலம் நூதனமான ஆரியமதமென்னும் வித்தை வெளிவருகின்றது. சில கால் அதுவும் மயங்கில் பூரியமத வித்தையென்று வெளிவரும்போலும்.

இத்தகைய மதவித்தைகளும், சாதிவித்தைகளும் நாளுக்குநாள் பெருகிவருவதைக் காண்டலும் கேட்டலுமாய் இருக்கின்றதன்றி பெரிய சாதிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர் பூமியைத் திருத்தும் நூதனக் கலப்பைகளைக் கண்டு பிடித்தார்கள் என்றாயினும் சுருக்கத்தில் நீரைப்பாய்ச்சும் ஏற்றங்களைக் கண்டுபிடித்தார்கள் என்றாயினும் நெல்லுகளையும், அரிசிகளையும் வெவ்வேறு பிரிக்கக்கூடிய இயந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள் என்றாயினும் இதுகாரும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.

சருவசுகந்தரும் பூமியின் விருத்தியில் சொற்ப அறிவை விருத்திச் செய்ய வகையற்றநாம் போட்டோகிராப், டெல்லகிராப், போனகிராப், மோனகிராப் என்னும் வித்தைகளையும் ஸ்டீம் இரயில்வே, டிராம்வே என்னும் வித்தைகளைக் கண்டுபிடிப்போமோ, ஒருக்காலும் ஆகாவாம்.

சிறந்த வித்தையிலும், புத்தியிலும் விருத்திப் பெற்று உலகெங்கும் உலாவி சகலதேச சருவசாதியோரிடத்திலும் கொள்வினை, கொடுப்பினை, உண்டபினை, உடுப்பினையால் ஒற்றுமெயுற்று சகலராலும் மதிக்கப்பெற்ற செங்கோலேந்தி சன்மார்க்கப் பெருக்கத்தால் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்துடன் இராட்சியபாரந் தாங்கி வரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரை ஓட்டிவிட்டு வித்தியா குறைவு, விசாரிணைக்குறைவு, ஒற்றுமெய்க் குறைவு, உறுதிக்குறைவு மிகுத்த நாம் சுயராட்சியம் வேண்டும் என்று எண்ணுவது எண்ணெய் வாணியன் கதைபோல் முடியும்.

ஏது சீர்திருத்தங்களை எண்ணி துணிந்தெழுதினும் இல்லா சாதிவித்தைகளும், இல்லா மத வித்தைகளும் இன்னும் பெருகுகின்றபடியால் இம்மட்டில் சுதேசசீர்திருத்தத்தை விடுத்து பூர்வசுதேசிகளாம் சாதிபேதமற்ற