பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இத்தகைய பொறாமெய்க்கொண்ட தேகிகள் மாடுகள் மீதுங் குதிரைகளின்மீதும் கருணைவைத்துள்ளார்கள் என்னில் நம்பத்தக்கதோ, இல்லை வாக்குக் கருணையே ஆகும்.

தன்னையொத்த மக்கள்மீது கருணையும் இதக்கமுமில்லா பாவிகள் தனக்கன்னியரூப மிருக சீவன்கள்மீது கருணையுள்ளார் என்பதைக் கனவிலும் காண்டல் அரிதேயாம்.

சுயசாதிக் கருணை சுயப்பிரயோசனக்கருணை மட்டிலும் மிக்கக் கொண்டாடுவார்கள். எவ்வகைத்தென்னில்:-

இருப்புப்பாதை இரண்டாம் வகுப்பு வண்டியில் ஓர் ஐரோப்பியர் ஏறிக்கொண்டிருக்க அதே வண்டியில் ஓர் சுதேசி ஏற அவர் தடுப்பாராயின், வெள்ளையர் ஏறியுள்ள வண்டியில் நம்மை ஏறக்கூடாதென்று தடுக்கின்றார்களே இது நியாயமாமோ, இது கருணையாமோவென்றும் இவரைப்போல் நாங்களும் இரண்டாம் வகுப்புக் கட்டணம் செலுத்தவில்லையோ என்றும் கூச்சலிடுவதுடன் பத்திரிகைகளுக்கும் பரக்க எழுதி பிரசுரிக்கின்றார்கள்.

இவ்வகை மறக்கருணை வாய்த்த மக்களேறியுள்ள மூன்றாவது வகுப்பு வண்டியில் இவனை ஒத்த கட்டணஞ் செலுத்திய ஓர் எழியமனிதன் வந்து ஏறவருவானாயின் அவனை சுதேசி என்று பாராது, தள்ளு தள்ளு வெளியில் என்று கூச்சலிடுவதுடன் தன்னையொத்த இஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரிவித்து அவ்வண்டியைவிட்டு அவனை இறக்கி வேறுவண்டியில் கொண்டுபோய் ஏற்றி அல்லடையச் செய்கின்றார்கள்.

இவ்வநீதச்செயல்களை எவரும் கேட்பாரில்லை மேய்ப்பாரில்லை போலும். ஆயினுந் தன்வினைத் தன்னை சுடுமென்னும் பழமொழிக்கிணங்க,

இருப்புப்பாதை உத்தியோகஸ்தர்கள் யாவரும் யீரோஷியராக வந்துவிடுங்கால் முன்வினை பின்னே சுட்டு முதுகு பிளப்புண்பது முழு நம்பிக்கையேயாம்.

- 2:7: சூலை 28, 1908 -


19. முநிசிபல் சங்கமும், ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரியவர்களும்.

சென்ற மங்களவாரம் கூடிய நகர சீர்திருத்த சங்கத்தாருள் மயிலாப்பூரின் சுடலை விஷயமாக நடந்த ஆலோசனையில் ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரியாரவர்கள் ஓர் மறுப்புக் கூறியிருக்கின்றனர்.

அதாவது - மேற்கண்டபடி சுடலைக்குப் போகும் வழியில் பறைச்சேரி இருக்கின்றபடியால் அவ்வழியாய் உயர்ந்தசாதியோர் போக அஞ்சுவார்கள் என்பதே.

இதில் உயர்ந்த சாதியோர் என்பது தற்கால பிராமணர்களைத் தான் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

இப்பிராமணர்கள் என்போர் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர் வாசஞ்செய்யும் இடங்களுக்குப் போவார்களானால் அடித்துத் துரத்தி சாணசட்டியை உடைப்பது பூர்வ வழக்கமாயிருந்தது. அப்பயத்தைக் கொண்ட உயர்ந்தசாதியார் பறைச்சேரியின் வழியாகப் போவதற்கு அஞ்சுகின்றார்கள் என்றார் போலும்.

அத்தகைய சாணச்சட்டி உடைக்குஞ் செயலும் அவ்வளவாக தற்காலம் நிறைவேறுகிறதில்லை.

தாழ்ந்த சாதியோர் வாசஞ் செய்யும் இடத்தில் உயர்ந்த சாதிகள் போவதில் சாதி கெடும் என்பது அவரது அபிப்பிராயமாய் இருக்குமாயின் சக்கிலிப்பிணம், தோட்டிப் பிணங்களை அறுத்து சோதிப்பதைவிட பறைச்சேரியின் வழியாகப் போவதால் சாதி கெடமாட்டாது.

ஈதன்றி பறைச்சேரி மத்தியில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியானவர்களே உபாத்தியாயர்களாக இருந்து அப்பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதும் சேரிக்குள் போக்குவருத்தாயிருப்பதும் ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரி அவர்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம்.