பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 / அயோத்திதாசர் சிந்தனைகள்


திராவிடர்களோ, யாதோர் ஆதரவும் அற்று பலவகை இடுக்கங்களாலும் நூதனமாக ஏற்படுத்திக்கொண்ட சாதிபேதச் செய்கைகளினாலும் தாழ்த்தப்பட்டு நசுங்குண்டு சிந்தை நைந்து சீரழிந்து வருங்காலத்தில்,

கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கம் வந்து தோன்றி மழையின்றி வாடிமடியும் பயிறுக்கு தேதிமழைபெய்து தலைநிமிர்ந்ததுபோல் சாதிபேதமற்ற திராவிடர்களுக்கோர் தெளிவுறுதலும் பிறந்தது.

- 2:27; டிசம்பர் 18, 1908 -

சத்துருக்களின் இடுக்கங்கள் கிஞ்சித்து நீங்கி கல்விவிருத்தியும், செல்வவிருத்தியும் உண்டாகி அவரவர்கள் வாசஞ்செய்துவந்த கிராமங்களில் வீடும், வயலும், தோப்புந் துறவுந் தாங்கள் ஊழியஞ்செய்யும் துரைமக்களின் கருணையால் பெற்று நாளுக்குநாள் சீர்பெற்று வந்தார்கள்.

இவற்றுள் போச்சுகீயர் 1,498 இங்கிலீஷ் 1,591 உலாந்தா 1,594 பிரன்ச்சி 1,638 வருடங்களில் இவ்விடம் வந்து குடியேறியவற்றுள் 1,541 வருடம் சவேரியாரென்னும் பெரியோர் இவ்விடம் வந்து கத்தோலிக்கு மார்க்கத்தைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் 1,697 வருடத்தில் பிஸ்க்கி என்னும் பேருடைய பெரியவர் கோணாக்குப்பத்தில் ஓர் கோவிலைக் கட்டிமுடித்து, மயிலாப்பூர் மேற்றாணியார் உத்திரவு பெற்று, குழந்தையைக் கையிலேந்தி இருப்பதுபோல் மாதாவின் படமொன்று எழுதிவந்து பெரியநாயகி என்னும் பெயரளித்து மயிலாப்பூரில் இஸ்தாபித்தார்.

இதன் காட்சிகளைக் கண்டிருந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களாக தங்கள் சத்துருக்களின் இடுக்கங்களால் நசுங்குண்டு குலகுருவாம் ஞானசூரியனையும் குலதேவதையாம் ஞானாம்பிகையையும் அவர்கள் போதித்துள்ள நல்லொழுக்கங்களையும் நழுவவிட்டு தங்கள் சொந்த மடங்களையுஞ் சத்துருக்களிடம் ஒப்படைத்துவிட்டு பராயர்கள் திரிமூர்த்தி கோவில்களுக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டு தாய்தகப்பனை திசைதப்பி விட்டு தவிக்கும் மைந்தர்களைப்போல் கலக்கமுற்று ஆங்கிலேயர்களின் ஆதரவைப் பெற்று சற்று சுகித்திருந்தவர்களாதலின் இப்பாதிரிகளும் ஆங்கிலேயர்போல் காண்கின்றபடியால் அவர்கள் மதத்தில் நாம் பிரவேசிப்போமாயின் இன்னும் சீருஞ் சிறப்பும் பெருவதுடன் அவர்கள் கோவிலுக்குள் யாதோர் தடையுமின்றி போக்குவருத்திலிருக்கலாம் என்னும் ஆசைகொண்டும் உங்கள் அடைக்கலம் புகுந்தார்கள். சத்துருக்களின் இடுக்கத்தினாலும் கோவிலில்லாக் குறைகளினாலும் ஆங்கிலேயர்களைப் போல் தங்களை ஆதரிப்பார்கள் என்னும் அன்பினாலும் சுகத்திலிருந்த யாவரும் கத்தோலிக்கு மார்க்கத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள். அவர்களின் நோக்கங்களை அறிந்த கத்தோலிக்குப் பாதிரிமார்களும் அவர்கள் வாசஞ்செய்யும் சேரிகளின் மத்தியிலும், பக்கங்களிலும் பூமிகளை வாங்கி ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாயில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டி சுற்றுமதில்களை எழுப்பி அதற்குள்ளாகவே பிணங்களைப் புதைக்கத் தக்க இடங்களும் நிருமித்துக்கொண்டார்கள்.

சாதிபேதம் உள்ளவர்களோ கிறீஸ்த்து மார்க்கத்தில் பிரவேசித்தால் தங்கள் சாதி கெட்டுப் போமென்று பயந்து யாரும் சேராமல் விலகி நின்றார்கள்.

ஆங்கிலேய துரைமக்களால் சுகம்பெற்றிருந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் கத்தோலிக்கு மார்க்கத்தைச்சேர்ந்து கண்டபலன் யாதெனில்.

- 2:28; டிசம்பர் 23, 1908 -

ஒருமனிதன் தங்களை வந்தடுத்து தங்கள் கூட்டத்தில் சேர்ந்தவுடன் பிள்ளைப் பெறுமாயின் அதற்கு ஞானஸ்னானக் கட்டணத் தொகை, ஆதிவாரந்தோரும் உண்டித்தொகை, அர்ச்சயசிரேஷ்டர்களின் உற்சாகத் தொகை, புதுநன்மெய், பழயநன்மெய்த்தொகை, விவாகத்தின் தொகை, பிள்ளையோ, பெரியோரோ இறந்தார்களாயின் குழிக்குத்தொகை, குழித்தோண்டுந்தொகை, மணியடிக்குந் தொகை, தூம்பாகுருசுத்தொகை, மீன் மெழுகுவர்த்திகளுதவாது